/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கைவினை பொருட்களில் சாதிக்கும் இல்லத்தரசி
/
கைவினை பொருட்களில் சாதிக்கும் இல்லத்தரசி
ADDED : மார் 08, 2026 05:39 AM

பெண்கள் வெளியே சென்று வேலை செய்து தான் சம்பாதிக்க முடியும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டில் இருந்தும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை, பல பெண்கள் நிரூபித்துள்ளனர். இப்படி, குடும்பத்தை சுமக்கும் கணவருக்கு தோள் கொடுக்கும் பெண்களில் ஒருவர் தான் ஸ்வேதா.
மைசூரு நகரில் வசிப்பவர் ஸ்வேதா, 40. இவர் அற்புதமான கைவினை பொருட்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். 15 ஆண்டுகளாக, கைவினை பொருட்கள் தயாரித்து விற்று வருகிறார். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். ஸ்வேதா முறைப்படி எந்த பயிற்சியும் பெறவில்லை. தனிப்பட்ட ஆர்வம், கற்பனை திறன் மற்றும் கடினமான முயற்சியால், இக்கலையை தானாகவே கற்றுக்கொண்டுள்ளார்.
மைசூரில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், உத்சவங்கள், சிறப்பு மேளாக்களில் ஸ்டால்கள் போட்டு, தான் தயாரித்த கலை பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்யாத நிலையிலும், மேளாக்களில் இவரது பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன.
இவரது கை வண்ணத்தில் தயாராகும் கலை பொருட்கள், ஆஸ்திரேலியா, ரஷ்யா, துபாய் போன்ற வெளி நாடுகளிலும் விற்பனையாகின்றன. வெளிநாடு வாழ் கன்னடர்கள், மைசூருக்கு வரும் போது, ஸ்வேதாவிடம் பொருட்களை வாங்கி, வெளிநாட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
வாசல்களில் கட்டும் விதவிதமான தோரணங்கள், மண் விளக்குகள், உலோக விளக்குகள், களி மண்ணில் வீட்டு அலங்கார கலை பொருட்கள், மயில், ஆஷ் ட்ரே, கடவுள் சிலைகள், அலுவலகங்களில் வைக்கும் அலங்கார பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், பரிசு பொருட்கள் உட்பட, பல விதமான பொருட்களை தன் வீட்டிலேயே தயாரிக்கிறார். நண்பர்கள், உறவினர்களுக்கு இவர் தயாரித்த பொருட்களையே பரிசாக அளிக்கிறார்.
இவரது கணவர் கல்லுாரி ஒன்றில், பேராசிரியாக பணியாற்றுகிறார். ஸ்வேதா தன் வீடு, குடும்பத்தையும் கவனித்து கொண்டு, தொழிலையும் சிறப்பாக நடத்துகிறார். டி.வி., யில் சீரியல் பார்த்து கொண்டு, அக்கம், பக்கத்து பெண்களுடன் அரட்டை அடித்து பொழுதை வீணாக்காமல், தன் நேரத்தை குடும்பத்துக்கு பயனுள்ள வகையில் செலவிடும் ஸ்வேதா, அனைத்து பெண்களுக்கும் வழிகாட்டியாக உள்ளார்.
- நமது நிருபர் -:

