ADDED : மே 28, 2025 11:00 PM

பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா, விஜயபுரா டவுன் மாருதி நகரில் வசித்தவர் பசவாச்சாரி, 35, இவரது மனைவி சுமா, 32. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரிடம் கோபித்து கொண்டு, சுமா துாங்க சென்று விட்டார்.
கோபத்தில் இருந்த பசவாச்சாரி, உடற்பயிற்சி செய்யும் தம்பிள்சை எடுத்து, மனைவியை அடித்து கொன்றார். பின், வீட்டின் இன்னொரு அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை இரண்டு பிள்ளைகளும் எழுந்து பார்த்த போது, பெற்றோர் இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்து வீட்டினரிடம் சென்று கூறினர். விஜயபுரா போலீசார் அங்கு சென்று, தம்பதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பசவாச்சாரி எழுதிய கடிதம் போலீசிடம் சிக்கியது.
'பண பிரச்னையில் எனக்கும், மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கோபத்தில் மனைவியை கொன்று விட்டேன். நானும் தற்கொலை செய்கிறேன்' என்று எழுதி இருந்தார்.
தற்போது, இரண்டு பிள்ளைகளும் ஆதரவின்றி பரிதவிக்கின்றன.