எம்.எல்.சி.,யை கொல்ல முயற்சி வழக்கின் விசாரணை குழு மாற்றம்
எம்.எல்.சி.,யை கொல்ல முயற்சி வழக்கின் விசாரணை குழு மாற்றம்
ADDED : ஏப் 03, 2025 07:59 AM
துமகூரு : காங்கிரஸ் எம்.எல்.சி., ராஜேந்திராவை கொல்ல முயன்ற வழக்கு குறித்து விசாரித்து வந்த, போலீஸ் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணாவின் மகன் ராஜேந்திரா. காங்கிரஸ் எம்.எல்.சி.,யான இவரை கொல்ல முயற்சி நடந்தது பற்றி துமகூரு கியாதசந்திரா போலீசில் வழக்குப் பதிவாகி உள்ளது.
இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய நபரான ரவுடி சோமா நேற்று இரவு போலீசில் சரணடைந்தார். அவர், தன் நண்பரான மனு என்பவரின் வங்கிக்கணக்கை பயன்படுத்தியது தெரிந்தது.
ராஜேந்திராவை கொலை செய்ய மனுவின் வங்கிக் கணக்கிற்கு தான் 5 லட்சம் ரூபாய் வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனால் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, துமகூரின் உப்பாரஹள்ளியில் உள்ள மனு வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க, மதுகிரி டி.எஸ்.பி., மஞ்சுநாத் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு இருந்தது.
இதில், ஷிரா ரூரல் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா, கியாதசந்திரா போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி சேத்தன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
நேற்று இந்த விசாரணை குழு மாற்றப்பட்டுள்ளது. மாகடி டி.எஸ்.பி., பிரவீன் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் கியாதசந்திரா இன்ஸ்பெக்டர் ராம்பிரசாத், எஸ்.பி., அலுவலக இன்ஸ்பெக்டர் அவினாஷ், ஷிரா ரூரல் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
