ADDED : ஏப் 12, 2026 12:41 AM

கலபுரகி: ஐ.பி.எல்., சூதாட்டத்தில் பணம் இழந்ததால், தடுப்பணையில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல நகரங்களில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் நடக்கும் போட்டிகளை மையமாக வைத்து, பணம் வைத்து சூதாட்டமும் நடக்கிறது.
பேட்ஸ்மேன் எத்தனை ரன்கள் அடிப்பார்; பந்து வீச்சாளர் எவ்வளவு ரன் விட்டு கொடுப்பார்; அணிகள் அடிக்கும் ரன்கள் எவ்வளவாக இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்து, சூதாட்டங்கள் நடக்கின்றன.
கலபுரகியின் கலகி தாலுகா ரும்மனகோடு கிராமத்தில் வசித்த சந்திரகாந்த் தேசாய், 40 என்ற தொழிலாளி, ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர் தோற்று போனார். இதனால் நிறைய பணத்தை இழந்தார்.
சூதாட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் அவரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். மனம் உடைந்த அவர் நேற்று காலை பென்னேதோரா தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. மகோகன் போலீசார் விசாரிக்கின்றனர்.
