ADDED : ஆக 18, 2026 07:46 PM

- நமது நிருபர் -: பா.ஜ., தேசிய யுவ மோர்ச்சா தலைவராக இருந்த எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 35, நீக்கப்பட்டுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
பா.ஜ., யுவ மோர்ச்சாவில் தேஜஸ்வி சூர்யா தனது பயணத்தை துவக்கினார். ஆறு ஆண்டுகளாக, பா.ஜ., யுவ மோர்ச்சாவின் தேசிய தலைவராக பணியாற்றி வந்தார்.
லோக்சபா உள்ளேயும், வெளியேயும் இவரின் பேச்சு திறமை, அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பா.ஜ., யுவ மோர்ச்சாவை வழிநடத்தியதால், சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யை சேர்ந்தவர்கள் போராட்டம் தொடர்பாக, லோக்சபாவில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு இவரே பெரும்பாலும் பதிலளித்தார். இவரின் பதிலை, கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், புதிய நிர்வாகிகள் குழுவை அறிவித்தார்.
அதில், பா.ஜ., யுவ மோர்ச்சா தலைவராக இருந்த தேஜஸ்வி சூர்யா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, குஜராத்தை சேர்ந்த ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை நீக்கியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இதன் பின்னால், பெரிய திட்டத்தை பா.ஜ., வைத்துள்ளதாக அக்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.
இதன்படி, பா.ஜ., புதிய தேசிய துணைத்தலைவர்கள், அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக, மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்ய பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.
இந்த மாற்றத்தின் போது, பிரபலமான மற்றும் இளம் தலைவர்களுக்கும், தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், யுவ மோர்ச்சா தலைவர் பொறுப்பை விட, பெரிய பதவி தேஜஸ்வி சூர்யாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மத்திய அமைச்சர் பதவிக்கான போட்டியில், அவரின் பெயரும் அடிபடுகிறது.
அவரது திறமை, தைரியம், வசீகரத்தை கருதி, மோடி அமைச்சரவையில் தேஜஸ்விக்கு இடம் வழங்கப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன.
