/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
/
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
'காந்தாரா' கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: பஞ்சுருளி தெய்வத்தின் கோபம் காரணமா?
ADDED : ஜூன் 13, 2025 11:20 PM
பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்துக்கு அடுக்கடுக்கான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எனவே படம் இனியும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடவுளின் கோபமே இதற்கு காரணம் என, ஆன்மிகவாதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ல், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி திரைக்கு வந்த, காந்தாரா படம் பல மொழிகளிலும் வெளியாகி, நாடு முழுதும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்த படத்தின் 2ம் பாகம், காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் விறுவிறுப்பாக தயாராகிறது.
ஆனால், படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்தே, ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. 2024 நவம்பரில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பயணம் செய்த மினி பஸ், கொல்லுாரின் ஜட்கல் அருகில் விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர்.
படப்பிடிப்புக்காக கொல்லுாரில் போடப்பட்டிருந்த செட் காற்றில் பறந்தது. இதில், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. வனப்பகுதியில் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக, ஜனவரி 3ல், படக்குழுவினர் மீது வழக்குப் பதிவானது. ஹாசன், சகலேஸ்புரா, கெரூரு கிராமத்தின் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பட்டாசு வெடித்தனர்.
இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறையில் புகார் அளித்தனர். அதிகாரிகள், படக்குழுவினரை அழைத்து எச்சரித்தனர். படப்பிடிப்பை நிறுத்தி இடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.
அசம்பாவிதம்
அடுத்து, 38 நாட்கள் இடைவெளியில், படக்குழுவில் மூவர் இறந்தனர். மே 6ம் தேதி, கொல்லுாரின் சவுபர்ணிகா ஆற்றில் நீச்சலடிக்க சென்ற இப்படத்தின் துணை நடிகர் கபில், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராகேஷ் பூஜாரி, மே 11ல், நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று நடமாடியபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் மலையாள நடிகர் நிஜு கலாபவன் மாரடைப்பால் இறந்தார். 'அடுத்தடுத்த அசம்பாவிதம் நடப்பதற்கு, கடவுளின் கோபமே காரணம்' என, பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காந்தாரா படத்தில் காண்பிக்கப்பட்ட கடவுள், பஞ்சுருளி தெய்வம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பியில் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள், பஞ்சுருளி தெய்வத்தை பக்தியுடன் வணங்கி வருகின்றனர். பஞ்சுருளி தெய்வத்திடம் என்ன வேண்டிக் கொண்டாலும் நடந்துவிடும் என்று, அவர்கள் நம்புகின்றனர்.
தண்டித்தே தீரும்
பஞ்சுருளி என்பது பன்றியின் முகம் கொண்ட கடவுளாக பாவிக்கப்படுகிறது. பார்வதி தேவி செல்லமாக வளர்த்த பன்றிக்குட்டி, தோட்டத்தை அழித்ததால் சிவபெருமான் கொன்றதாகவும், இதனால் சிவபெருமான் மீது பார்வதி கோபம் கொண்டதாகவும், பார்வதியை மகிழ்விக்க இறந்த பன்றிக்குட்டியை உயிர்ப்பித்து மக்களை பாதுகாக்க, பூமிக்கு அனுப்பியதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
பஞ்சுருளி தெய்வம் மிகவும் கோபமானது; தவறு செய்தவர்களை தண்டித்தே தீரும் என்று கூறப்பட்டாலும், தன்னை மனம் உருகி வழிபடுபவர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றி வைத்துவிடும் என்றும், கடலோர மக்கள் சொல்கின்றனர்.
நேரம் சரியில்லை
இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட ஆன்மிகவாதிகள் சிலர் கூறுகையில், 'பஞ்சுருளி தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுள் வேஷம் கட்டி ஆடுபவர்களுக்கு கூட, கொட்டகை அமைத்து தான் வேஷம் போடப்படுகிறது. வேஷம் போடும்போது கூட, கடவுளை யாரும் பார்க்க கூடாது என்ற நடைமுறை உள்ளது. காந்தாரா படத்தில் பஞ்சுருளி தெய்வகத்தின் சக்தியை வெளிக்காட்டினாலும், கடவுள் வேஷம் போட்டு ஆடும்போது, ஏதாவது தவறு செய்து இருக்கலாம். வழிபாட்டு முறையில் ஏதாவது மாற்றம் செய்து இருக்கலாம்.
படப்பிடிப்பின்போது, தெய்வத்தை அவமதிக்கும் வகையில், ஏதாவது தவறு செய்து இருக்கலாம். இதனால் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி, படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்த மூன்று பேர் இறந்து இருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் ரிஷப் ஷெட்டி, பஞ்சுருளி தெய்வத்தை வழிபட்டபோது கூட, 'உனக்கு நேரம் சரியில்லை. எச்சரிக்கையாக இரு' என்று எச்சரித்தது' என்றனர்.