மைசூரு தசராவில் கம்பாலா போட்டி: கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தகவல்
மைசூரு தசராவில் கம்பாலா போட்டி: கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தகவல்
ADDED : ஜூன் 20, 2026 10:57 PM
மைசூரு: ''இந்தாண்டு தசராவுடன், முதன் முறையாக கம்பாலா நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார்.
மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அரங்கத்தில், நேற்று மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் கம்பாலா நிகழ்ச்சிக்கான கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
இந்தாண்டு தசராவுடன், முதன் முறையாக கம்பாலா நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காததால், சாத்தியமாகவில்லை.
இம்முறை கம்பாலா நடத்த மைசூரு விஜயநகரம் முதல் ஸ்டேஜ், நான்காவது கட்டம், சதகள்ளி வட்ட சாலை என மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு இடம் தேர்வு செய்யப்படும்.
கம்பாலாவுக்கு குறைந்தபட்சம், 7 ஏக்கர் நிலம் தேவைப்படும். நிகழ்ச்சிக்கு தேர்வாகும் இடத்தில் வாகன நிறுத்தும் இடங்கள், பார்வையாளர் மாடங்கள், ஏற்பாட்டாளர்கள் தங்கும் இடம் ஆகியவற்றையும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தசரா திருவிழாவை முன்னிட்டு செய்யப்படும் கம்பாலா நிகழ்ச்சியின் துணை குழுவுக்கு, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
