கன்னட நடிகர் நிரஞ்சன் மீது பாரில் பீர் பாட்டிலால் தாக்குதல்
கன்னட நடிகர் நிரஞ்சன் மீது பாரில் பீர் பாட்டிலால் தாக்குதல்
ADDED : ஏப் 07, 2026 05:26 AM

சுப்பிரமணியபுரா: பாரில் ஏற்பட்ட தகராறில், கன்னட நடிகர் நிரஞ்சனின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய, நான்கு பேரை போலீசார் தேடுகின்றனர்.
கன்னட திரை உலகில் இளம் நடிகர் நிரஞ்சன், 33. 'ஓடையா' என்ற திரைப்படத்தில், தர்ஷன் தம்பியாக நடித்து கவனத்தை ஈர்த்தவர். பெங்களூரு உத்தரஹள்ளியில் வசிக்கிறார்.
கடந்த மாதம், 28ம் தேதி இரவு, சக நடிகர் யஷஸ் சூர்யா வீட்டிற்கு பைக்கில் சென்றார். அவரை பார்த்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார்.
உத்தரஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள பார் முன் பைக்கை நிறுத்த முயன்றார். அப்போது அங்கு நின்ற ஒருவர், வேண்டும் என்றே, நிரஞ்சனை பிடித்து தள்ளினார்.
அந்த நபரிடம் நான் நடிகர் என்று நிரஞ்சன் கூறினார். நீ நடிகராக இருந்தால் எனக்கு என்ன; இது எங்க ஏரியா என்று கூறியதால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பார் ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.
பின், நிரஞ்சன் உள்ளே சென்றார். ஒரு மணி நேரம் கழித்து அவர் வெளியே வந்த போது, அவரிடம் தகராறு செய்தவர் உட்பட நான்கு பேர் அங்கு நின்றனர். நிரஞ்சனிடம் மீண்டும் தகராறு செய்தனர். அதில் இருவர், நிரஞ்சன் மண்டையில் பீர் பாட்டிலால் அடித்தனர். பின், நான்கு பேரும் அங்கிருந்து தப்பினர்.
காயம் அடைந்த நடிகரை, பார் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். நடிகர் அளித்த புகாரில் சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நான்கு பேரையும் தேடிவருகின்றனர். இச்சம்பவம் தாமதமாக நேற்று வெளியாகி உள்ளது.
