பி.எம்., ஸ்ரீ அரசு பள்ளிகளில் கராத்தே, யோகா பயிற்சி திட்டம்
பி.எம்., ஸ்ரீ அரசு பள்ளிகளில் கராத்தே, யோகா பயிற்சி திட்டம்
ADDED : ஜூலை 12, 2026 11:58 PM
பெங்களூரு: மா ணவ - மாணவியர் தங்களை தற்காத்து கொள்ளவும், உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளவும், கர்நாடகாவில், 579 பி.எம்., ஸ்ரீ அரசு பள்ளிகளில், கராத்தே, யோகா பாடங்களை அறிமுகப்படுத்த, கர்நாடக கல்வி துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு, 'வளரும் இந்தியாவுக்கான பி.எம்., பள்ளிகள்' என்ற பெயரில், 2022 செப்டம்பர் 7ல் பி.எம்., ஸ்ரீ திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின் மூலம், அரசு பள்ளிகளை, நவீன உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட கற்றல் வசதிகள், சிறந்த கல்வி தரங்களுடன் தரம் உயர்த்தி, அவற்றை முன்மாதிரி நிறுவனங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கர்நாடகாவில், 579 பி.எம்., ஸ்ரீ அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு கராத்தே, யோகா பயிற்சி அளிக்க, கர்நாடக கல்வி துறை முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, மாணவியருக்கு கராத்தே வகுப்பு எடுப்பதால், இக்கட்டான சூழ்நிலையில் தங்களை தற்காத்து கொள்ள இந்த பயிற்சி உதவும். கராத்தே, யோகா பாடத்தால், மாணவர்களின் உடல் தகுதி, மனநலம், ஒழுக்கம், தன்னம்பிக்கை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடினமான அல்லது அவசர கால சூழ்நிலையை சிறப்பாக செ யல்படுத்த, அவர்களை தயார்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும். கல்வி துறையின் இந்த முடிவு, பி.எம்., ஸ்ரீ பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசின் திட்டத்தை கல்வி வல்லுனர்கள் வரவே ற்றுள்ளனர்.
கல்வி நிபுணர் சந்திரசேகர் கூறுகையில், ''பி.எம்., ஸ்ரீ பள்ளிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் யோகா, கராத்தே பாடங்களை விரிவுபடுத்த வேண்டும். இதனால் மாணவர்கள் அத்தியாவசிய வாழ்க்கை திறன்களை வளர்த்து கொள்ளவும், பாதுகாப்பான பள்ளி சூழலை மேம்படுத்தவும் உதவும்,'' என்றார்.
