ADDED : டிச 06, 2025 05:28 AM

- நமது நிருபர் -:
நம்மூர் டீக்கடைகளில் வாழைக்காய் பஜ்ஜி இருப்பது போல, கேரளாவில் உள்ள டீக்கடைகளில் பழம் பொரி, அப்பம் எனும் ஏதோ ஒரு வகையில் நேந்திரம் பழம் இருக்கும். இது, அங்கு பிரபலமான உணவுகளில் ஒன்று. கேரளாவிற்கு செல்வோர் யாரும் இதை ருசிக்க மறப்பதில்லை. இதை தயாரிப்பதை பார்ப்போமா.
தேவையான பொருட்கள்
l நேந்திரம் வாழைப்பழம் 2
l முந்திரி 8
l உலர் திராட்சை 8
l தேங்காய் துருவல் 1 கப்
l ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
l சர்க்கரை 4 ஸ்பூன்
l மைதாமாவு 4 ஸ்பூன்
l நெய் 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியில் நெய் ஊற்றவும். இதில், முந்திரி, திராட்சை போட்டு லேசாக வதக்கவும். இதில், தேங்காய் துருவலை போட்டு வதக்க வேண்டும். ஏலக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின், நன்கு பழுத்த இரண்டு நேந்திரம் வாழைப்பழங்களின் தோலை நீக்க வேண்டும். வாழைப்பழத்தின் நடுவே கத்தியால் கீறி கொள்ள வேண்டும்.
இந்த கீறப்பட்ட பகுதிக்குள் ஏற்னவே வதக்கி வைத்துள்ள தேங்காய் துருவலை வைக்க வேண்டும். பின், மைதா மாவில் லேசாக தண்ணீர் ஊற்றி கிளறி, அதை வாழைப்பழத்தின் கீறப்பட்ட பகுதிக்கு மீது போட்டு மூட வேண்டும்.
இதையடுத்து, தோசைக்கல்லில் லேசாக நெய் விட்டு, அதில் இரண்டு வாழைப்பழங்களையும் போட வேண்டும்.
அனைத்து பக்கங்களும் படும்படி வேக வைக்க வேண்டும். இதை எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான நேந்திரம் பழம் அப்பம் தயார். இதை மாலை வேளையில் வீட்டில் செய்து குடும்பத்துடன் சா ப்பிட்டு மகிழலாம்.

