கே.எஸ்.சி.ஏ., கோடை கால முகாம் 127 வீரர் - வீராங்கனையருக்கு பயிற்சி
கே.எஸ்.சி.ஏ., கோடை கால முகாம் 127 வீரர் - வீராங்கனையருக்கு பயிற்சி
ADDED : ஏப் 30, 2026 11:50 PM

- நமது நிருபர் -:
கே.எஸ்.சி.ஏ., சார்பில் 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள், 15, 19 வயதுக்கு உட்பட்ட வீராங்கனையருக்கான கோடைகால முகாமில், மூன்று மாவட்டங்களை சேர்ந்த 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மைசூரு பிரிவு சார்பில் ஆண்டுதோறும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு 14, 16, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள், 15, 19 வயதுக்கு உட்பட்ட வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டனர்.மாண்டியா, சாம்ராஜ் நகர், மைசூரில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் சிறப்பாக விளையாடிய ஒவ்வொரு பிரிவிலும் தலா 25 பேர் என 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி முகாம், மைசூரு மானசகங்கோத்ரி எஸ்.டி.என்.ஆர்., உடையார் மைதானத்தில் நடத்தப்படும்.
இந்த பயிற்சி முகாமை, முன்னாள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனையும், கே.எஸ்.சி.ஏ., நிர்வாக கமிட்டி உறுப்பினருமான கல்பனா வெங்கடாச்சார் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
வெற்றி மற்றும் தோல்வியை கடந்து செல்லும்போது, வீரர்களுக்கு குணநலன்களை வளர்ப்பதும், வாழ்க்கை திறன்களை புரிந்து கொள்ள உதவுவதே இந்த அகாடமியின் நோக்கம்.கிரிக்கெட்டையும், கல்வியையும் இணைப்பதில் நாம் சம நிலையை கண்டறிய வேண்டும்.
தினமும் சில மணி நேரம் கிரிக்கெட் விளையாடுவது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், மனநிலையை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், கே.எஸ்.சி.ஏ., நிர்வாக குழு உறுப்பினருமான அவினாஷ் வைத்யா பேசியதாவது:
இந்த அகாடமிக்கு அனுபவம் வாய்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து வருகை தந்து, தங்கள் அறிவை பகிர்ந்து கொள்வர்.
முதல்தர கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல்., உரிமையாளர்களுடன் பணியாற்றிய நிபுணத்துவம் வாய்ந்த உடற் பயிற்சியாளர்கள், செயல் திறன் ஆய்வாளர்கள் எங்களிடம் உள்ளனர். அவர்கள் இங்குள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மனம் மற்றும் உடல் வலிமையை புரிந்து கொள்ள உதவுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
