'கிரஹலட்சுமி பயோமெட்ரிக்' பதிவு ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாள்
'கிரஹலட்சுமி பயோமெட்ரிக்' பதிவு ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாள்
ADDED : ஜூலை 21, 2026 03:02 AM
பெங்களூரு: ''கிரஹலட்சுமி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பயோமெட்ரிக் பணிகளுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும்,'' என்று முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், உயிரிழந்தவர்கள், தகுதியற்ற பயனாளிகளுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 4.30 லட்சம் தகுதியற்ற, உயிரிழந்த பயனாளிகள் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க, தகுதியுள்ள பயனாளிகள் அனைவரும் கைரேகை, முக சரிபார்ப்பு, கருவிழி ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கடந்த மாதம் மாநில அரசு உத்தரவிட்டது. பயோமெட்ரிக் பதிவு செய்வோருக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பயோமெட்ரிக் பணிகளை மேற்கொள்வதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, முதல்வர் சிவகுமார் நேற்று கூறியதாவது:
கிரஹலட்சுமி பணம் கிடைக்க பயோமெட்ரிக் மேற்கொள்வது கட்டாயமாகும். இதன் மூலம் தகுதியான பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மட்டுமே பணம் செலுத்தப்படுவது உறுதி செய்யப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
பயோமெட்ரிக் பதிவு செய்வதற்கு, ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும். தகுதியான பயனாளிகள் தங்கள் வங்கி விபரம், ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்டவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். குடும்ப தலைவிகள் தங்களுடைய மொபைல் எண்ணுக்கு பதிலாக பிறருடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டாம். தகுதியான பயனாளிகள் ஒருவரின் பெயர் கூட நீக்கப்படாது. விருப்பமுள்ளவர்கள் தாமாகவே விலகிக்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
