/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாயில்லா ஜீவன்களை நேசிக்க பழகலாமே!
/
வாயில்லா ஜீவன்களை நேசிக்க பழகலாமே!
ADDED : அக் 27, 2025 03:21 AM

'தெருநாய்கள் மீது கல்லெறிந்து காயப்படுத்தாதீர்கள்; விரட்டி அடிக்காதீர். இவைகளுக்கு வீடே தெருக்கள் தான். அவற்றை ஏன் கொடுமைப்படுத்த வேண்டும். அவற்றையும் நேசியுங்கள்' என்கிறார், ராபர்ட்சன்பேட்டை பைப் லைன் பகுதியில் வசிக்கும் ராதா, 38, என்ற பெண்.
இவர், 12 ஆண்டுகளாக தெருநாய்களை நேசித்து தினமும் உணவு அளிப்பதுடன், உடல் நலம் பாதித்தால், உரிய மருத்துவமும் பார்க்கிறார். இவரது வீட்டில் ஒரு நாயை மிக செல்லமாக வளர்த்து வந்தார். அந்த செல்ல பிராணி, கர்ப்பமாக இருந்த போது, அதன் வயிற்றில் குட்டி இறந்ததால் பிரசவ வலியில் தாயும் இறந்தது. இது அவருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. அதன் படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்.
இது குறித்து, ராதா கூறியதாவது
வாயில்லா ஜீவன்கள் வளர்ப்பு நாய் இறந்த பின், தெரு நாய்கள் மீதும் எனக்கு பரிவு ஏற்பட்டது. அவைகள் வாயில்லா ஜீவன்கள். பாசம் உள்ள விலங்குகள். அவைகளும் கூட கடவுளின் படைப்புகள் தான். நம்மோடு வாழ வேண்டிய அவதாரங்கள். அவைகளுடன் பழகினால் தான், அதன் அருமை தெரியும். தெரு நாய்களையும் நேசியுங்கள்; அன்பு செலுத்துங்கள். நமக்கும், நம் சுற்றுப்புறத்துக்கும் பாதுகாப்பை தரும்.
சிலர் தெருநாய்களைக் கண்டாலே கல்லெறிந்து காயப்படுத்தி ரசிக்கின்றனர். அதன் வலியை புரிந்து கொள்வதில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் உணவளித்து வருகிறேன். நான் சாப்பாடு கொண்டு வருவேன் என காத்திருக்கும். உணவுடன் சென்றதும் துள்ளி குதித்து அன்பைக் காட்டும் போது, சொல்லும் வார்த்தைக்கு ஈடே இல்லை.
தெரு நாய்களுக்கு உணவளிப்பதால் என்னை சிலர் துாற்றுவதும் உண்டு; அதை பொருட்படுத்துவதில்லை. சிலர் பாராட்டுவதும் உண்டு, அதனையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இரண்டையும் சமமாக நினைக்கிறேன்.
மருந்து வழங்கல் கோழியின் தலை, கால்களை கடையில் வாங்கி வந்து வேக வைத்து நாய்களுக்கு வழங்குகிறேன். இரவில் பன், பால் வழங்குகிறேன். சில நாய்கள் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டால், அவைகளுக்கு மருந்து வாங்கி வழங்குகிறேன்.
அவைகளை பராமரிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் கூட எனது விருப்பத்துக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள தெரு நாய்களுக்கு மட்டுமின்றி, அடுத்த தெருவில் நடமாடும் தெருநாய்களுக்கும் உணவளிப்பேன். இவைகள் தங்குவதற்கு வசதி கிடையாது. தெருக்களே வீடுகள்; அதையும் வாழ விடுங்கள்.
பிற நகரங்களில் உள்ளது போல தெருநாய்களை காப்பாற்ற தங்கவயல் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகளுக்கு உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 'புளுகிராஸ்' அமைப்புகள் தங்கவயலிலும் உருவாக வேண்டும். விலங்குகள் காப்பகம் வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

