ADDED : ஜூலை 18, 2026 11:07 PM

பெங்களூரு: அறிவுரை கூறிய தந்தையை கொலை செய்த மகனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரின், ராஜாஜிநகர் நான்காவது பிளாக்கின், ஏழாவது பிரதான சாலையில் வசித்தவர் ராமச்சந்திரா, 55, லாரி டிரைவர். இவரது மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டவர். எனினும், பணிக்கு சென்று குடும்பத்தையும் நிர்வகித்தார்.
ஆனால் இவரது மகன் ரகு, 30, குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். எந்த பணிக்கும் செல்லாமல், ஊரை சுற்றினார். அது மட்டுமின்றி, குடிப்பதற்கு பணம் கேட்டு, பெற்றோரிடம் தகராறு செய்வதும் வழக்கம்.
கடந்த 2025ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதியன்று இரவும், குடித்து வந்து தகராறு செய்தார். இவரை தந்தை ராமச்சந்திரா திட்டி, அறிவுரை கூறினார். கோபமடைந்த ரகு, கடப்பாரை கம்பியால், தந்தையின் மண்டையில் ஓங்கி அடித்தார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ராஜாஜிநகர் போலீசார், ரகுவை கைது செய்தனர். விசாரணையை முடித்து, பெங்களூரின், 68வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில் ரகுவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
