ADDED : ஜூலை 18, 2026 11:06 PM

பெங்களூரு: விபத்தில் காயம் அடைந்து, மூளை செயல் இழந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். இதனால், ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
பெங்களூரின் ராஜாஜிநகரில் வசிப்பவர் லோகேஷ். இவரது மனைவி ஸ்வேதா. தம்பதியின் ஒரே மகன் சஞ்சன், 19. பட்டப்படிப்பு படித்த சஞ்சன், தன் தந்தை லோகேஷ் நடத்தி வரும் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
ஜூலை 8ம் தேதியன்று, லோகேஷ் தன் குடும்பத்துடன், தமிழகத்தின் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றார். தரிசனம் முடிந்து காரில் பெங்களூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ராயக்கோட்டை அருகே செல்லும் போது, இவர்களின் கார் மீது லாரி மோதியது.
இதில் சஞ்சனும், அவரது பாட்டி சுப்புலட்சுமியும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத நிலை காணப்பட்டது.
அதன்பின், அங்குள்ள தனியார் மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து ஓசூரின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் பெங்களூரின், பொம்மசந்திராவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு, சஞ்சன் மாற்றப்பட்டார். டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தும், நேற்று முன் தினம் அவரது மூளை செயல் இழந்தது.
ஒரே மகனை இழந்த துக்கத்திலும், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, லோகேஷ் - ஸ்வேதா தம்பதி முன் வந்தனர். சஞ்சனின் கண்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் தானம் செய்யப்பட்டன.
இவரால் ஏழு பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.
