ADDED : ஆக 12, 2026 12:03 AM
பெங்களூரு: பெங்களூரு நகர மாவட்டம், ரூரல் மாவட்டங்களில், 13 இடங்களில் அரசு கருவூல அலுவலகத்தில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
பெங்களூரு நகர மாவட்டம், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் உள்ள அரசு கருவூலம் அலுவலகத்தில் நிதி ஒதுக்கீட்டில் ஊழல் நடப்பதாகவும், பணி முடித்ததற்கான பில் தொகை வழங்குவதில் தாமதம் செய்வதாகவும், லோக் ஆயுக்தாவுக்கு பொது மக்கள் புகார்கள் அனுப்பி வந்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை 4:30 மணிக்கு, பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள ஏழு கருவூல அலுவலகங்கள்; பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் உள்ள ஐந்து கருவூல அலுவலகங்கள், கே.ஜி.ஐ.டி., எனும் கர்நாடக அரசு காப்பீடு துறை அலுவலகத்தில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தினர்.
இந்த ரெய்டில், 11 லோக் ஆயுக்தா அதிகாரிகள், 39 போலீசார், லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், உபலோக் ஆயுக்தாக்கள் பனீந்திரா, வீரப்பா ஆகியோரின் செயலர்கள் இடம் பெற்றிருந்தனர்.
லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில், 'பணி முடித்ததற்கான பில்கள் வழங்கப்பட்டு பல நாட்களாகியும், பரிசீலனையில் இருப்பதாக கூறி காலம் தாழ்த்தி வருவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் எங்களுக்கு புகார் வந்தது.
'இதன் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில், லட்சக்கணக்கான ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஊழியர்கள் அடையாள அட்டை, முறையான சீருடை அணியாமல் பணியாற்றியது, நிதி பரிவர்த்தனையை முறையாக பராமரிக்காமல் விட்டது தெரியவந்துள்ளது' என்றனர்.
உபலோக் ஆயுக்தா வீரப்பா கூறுகையில், ''புகாரின் அடிப்படையில், 13 தனித்தனி குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரு வடக்கு கருவூலம் அலுவலகத்தில், கடந்த, எட்டு மாதங்களில், 23 லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
''இங்குள்ள அதிகாரியின் மாத சம்பளம் 70,000 ரூபாய் மட்டுமே. ஆனால், அவரின் வங்கி கணக்கில், மாதந்தோறும் 5 முதல் 6 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
' 'இதற்கு உரிய பதில் அளிக்காததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.
