ADDED : ஜூன் 14, 2026 11:34 PM

பெல்லந்துார்: திருமணத்துக்கு சம்மதிக்காத காதலியை, கத்தியால் குத்தி கொலை செய்த காதலர் கைது செய்யப்பட்டார்.
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹங்க்மா சூபா, 22. மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கை சேர்ந்தவர் புர்பா லேப்சா, 26. காதலர்களான இவர்கள், பிழைப்பு தேடி, கடந்த ஒரு மாதத்துக்கு முன், பெங்களூரு வந்தனர்.
தொட்டகன்னஹள்ளியில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கே.ஆர்.புரத்தில் உள்ள சலுான் ஒன்றில், ஹங்க்மா சூபா வரவேற்பாளராக பணியாற்றினார். புர்பா லேப்சா, ஹோட்டல் ஒன்றில், வெயிட்டராக பணியாற்றினார். விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என, புர்பா லேப்சா கட்டாயப்படுத்தினார்.
ஆனால் ஹங்க்மா சூபா, இன்னும் சில நாட்கள் போகட்டும் என, கூறி மறுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வேறு நபருடன் ஹங்க்மா சூபாவுக்கு தொடர்பு இருக்கும் என, காதலருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் காதலர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. இது தொடர்பாக, அவ்வப்போது வாக்குவாதம் நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை, திருமணம் தொடர்பாக, இவர்களிடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த புர்பா லேப்சா, சமையல் அறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, ஹங்க்மா சூபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கூறினர். அங்கு வந்த பெல்லந்துார் போலீசார், கொலையாளியை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
