/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தபால் துறையிடம் 'ஆர்டர்' வீடு தேடி வரும் மாம்பழம்
/
தபால் துறையிடம் 'ஆர்டர்' வீடு தேடி வரும் மாம்பழம்
ADDED : ஏப் 14, 2025 05:51 AM

பெங்களூரு: மாம்பழங்களை மக்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் சேவையை தபால்துறை துவக்கியுள்ளது. கர்நாடக மாம்பழ மேம்பாடு மற்றும் மார்க்கெட் கார்ப்பரேஷன் இணைய தளம் மூலம், ஆன்லைனில் மாம்பழங்களை ஆர்டர் செய்யலாம்.
இது குறித்து, கர்நாடக மாம்பழ மேம்பாடு மற்றும் மார்க்கெட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளிடம் இருந்து, தரமான மாம்பழங்களை, நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தபால் துறையுடன், ஒப்பந்தம் செய்து உள்ளோம். இடைத்தரகர்களின் தொந்தரவு இல்லாமல், விவசாயிகள் பழங்களை விற்பனை செய்யலாம்.
மாம்பழம் வேண்டுவோர் www.karsimngoes.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். தங்களுக்கு விருப்பமான மாம்பழங்களை ஆர்டர் செய்யலாம்.
மல்கோவா, அல்போன்சா, தோத்தாபுரி, மல்லிகா, செந்துாரா உட்பட பல ரகங்களின் மாம்பழங்கள், இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக மக்களுக்கு கிடைக்கும். ஒரு பாக்சில் 3.5 கிலோ மாம்பழம் இருக்கும். பழத்தின் விலையுடன், பார்சல் சேவைக்கு 82 ரூபாய் தனியாக செலுத்த வேண்டும். பழ ரகங்களின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராம்நகர், சிக்கபல்லாபூர், கோலார் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு, மாம்பழங்கள் வருகின்றன. 2019 முதல் பெங்களூரு தபால் அலுவலகம் மூலம், 1 லட்சம் பாக்ஸ்களுக்கும் அதிகமான மாம்பழங்கள், மக்களை சென்றடைந்தன. இதனால் தபால் துறைக்கு 83 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; நுாற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.