ADDED : மே 11, 2026 11:17 PM

- நமது நிருபர் -:
மாண்டியா மாவட்டத்தில், மாரம்மா கோவில் உள்ளது. இது, அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகளுக்கு பிடித்தமான கோவிலாகும். மிகவும் சக்தி வாய்ந்தது.
மாண்டியாவில் அற்புதமான மாரம்மா கோவிலாக இது உள்ளது. இது, பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், அரசியல்வாதிகள், நடிகர், நடிகையர் அவ்வப்போது வந்து செல்வர்.
இங்கு குடி கொண்டுள்ள அம்பாளுக்கு, ஆரத்தி உக்கட மாரம்மா, அஹல்யா தேவி, ஆதிசக்தி, சண்டி சாமுண்டி, கருணாமயி, அபயங்கரி, சாந்த சொரூபினி, காளிகா மோகினி, துஷ்ட சம்ஹாரிணி, தோஷ நிவாரிணி என, பல பெயர்கள் உண்டு.
இங்கு குடிகொண்ட அம்பாள், மிகவும் சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் வேண்டும் வரங்களை, அள்ளித்தருபவர். பில்லி, சூனிய பிரச்னை, உடல் ஆரோக்கிய பிரச்னைகளை விரட்டுவார் என்பது என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
மன ரீதியான பிரச்னையால் அவதிப்படுவோர், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், நோய் சரியாகும் என கூறப்படுகிறது.
மாரம்மாவின் மகிமையை அறிந்து, மைசூரு மஹாராஜாக்கள், இங்கு வந்து அம்பாளை தரிசித்தனர். கோவிலில் சர்வ அலங்காரத்துடன் காட்சியளிக்கும் மாரம்மாவின் விக்ரகம் மரத்தால் செதுக்கப்பட்டதாகும். இத்தகைய விக்ரகங்களை காண்பது, மிகவும் அபூர்வம்.
பல ஆண்டுகளுக்கு முன், 11 சகோதரர்கள் மீன் பிடிக்க சென்ற போது, ஆற்றில் இந்த அம்பாளின் விக்ரகம் கிடைத்தது. அவர்கள் விக்ரகத்தை கொண்டு வந்து, இங்கு பிரதிஷ்டை செய்தனர். அந்த சகோதரர்களின் குடும்பத்தினர் தினம் ஒருவராக பூஜை செய்கின்றனர்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வியாழன் அன்று அருள் கேட்கலாம்; நீங்கள் நினைக்கும் பணி நடக்குமா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோவிலுக்கு கன்னடம் மட்டுமின்றி, தெலுங்கு நடிகர், நடிகையரும் வந்து தரிசித்து செல்கின்றனர். இங்கு வந்து மாரம்மாவை தரிசனம் செய்தால், ஆயுள், ஆரோக்கியம் விருத்தியாகும் என்பது ஐதீகம்.
