/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ கட்டணம் குறையும் நிர்வாக இயக்குனர் தகவல்
/
மெட்ரோ கட்டணம் குறையும் நிர்வாக இயக்குனர் தகவல்
ADDED : பிப் 14, 2025 05:31 AM
பெங்களூரு: ''பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் விரைவில் குறைக்கப்படும்,'' என, நம்ம மெட்ரோ நிர்வாக இயக்குனர் மகேஸ்வர் ராவ் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கடந்த 9 ம் தேதி மெட்ரோ கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்துவதாக நிர்வாகம் அறிவித்தது. பயணியர் பலரும் பாதிக்கப்பட்டனர். மெட்ரோ ரயிலில் செல்லும் பயணியரின் எண்ணிகையும் குறைந்தது.
இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா தனது, 'எக்ஸ்' பக்கத்தில், கட்டணத்தை குறைக்குமாறு, மெட்ரோ நிர்வாக இயக்குனரிடம் முறையிட்டு இருந்தார்.
இந்நிலையில், நேற்று மெட்ரோ நிர்வாக இயக்குனர் மகேஸ்வர் ராவ் அளித்த பேட்டி:
நம்ம மெட்ரோ, கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பராமரிப்பு செலவுகள் அதிகரித்து உள்ளன. 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் உள்ளது. அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் அதை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதனை கருத்தில் கொண்டு, பல ஆலோசனைகளுக்கு பின்னர், மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், கட்டண உயர்வுக்கு பொது மக்கள், பயணியர், அரசியல் தலைவர்கள் என பலரிடமிருந்தும் எதிர்ப்பு வந்து உள்ளன. பயணியரின் கேள்விகளுக்கு மெட்ரோ நிர்வாகம் கட்டாயம் பதிலளிக்கும். இந்த விலை உயர்வு குறித்து, மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளோம்.
இதன்பின், டிக்கெட் கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயும், அதிகபட்ச கட்டணம் 90 ரூபாய் வசூலிப்பதிலும் எவ்வித மாற்றமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

