ADDED : ஜூலை 21, 2026 09:53 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில் பச்சை நிற வழித்தடத்தில் ஏற்பட்ட மின்சார கோளாறால், நேற்று காலையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
பெங்களூரு மெட்ரோ ரயில்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதால், அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. இது பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மாதவரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலான பச்சை நிற வழித்தடத்தில் நேற்று காலை மின்சார கோளாறு ஏற்பட்டது. ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மாதவரா முதல் யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இயக்கப்படவில்லை.
காலையில் பரபரப்பான நேரத்தில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால், வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை 8:00 மணிக்கு ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ஊழியர்கள் களத்தில் இறங்கி மின்சார கோளாறை சரி செய்தனர். காலை 8:45 மணிக்கு மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயங்கின. 45 நிமிடங்கள் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு பயணியரிடம் மன்னிப்பு கேட்பதாக மெட்ரோ நிர்வாகம் கூறி உள்ளது.
