காணாமல் போன பெண் கொலை: கள்ளக்காதலர் மீது குற்றச்சாட்டு
காணாமல் போன பெண் கொலை: கள்ளக்காதலர் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 11, 2026 11:25 PM

பாகல்கோட்: சந்தைக்கு சென்று காணாமல் போன பெண், கொலையாகி அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த கொலைக்கு கள்ளத்தொடர்பே காரணமாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.
பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின், பதநுாரு கிராமத்தில் வசிப்பவர் லட்சுமண் ரங்கன்னவரா, 35. இவரது மனைவி அனுசூயா, 30. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஜூலை 7ம் தேதியன்று, லோகாபுராவில் நடக்கும் சந்தைக்கு செல்வதாக, குடும்பத்தினரிடம் கூறி சென்ற அனுசூயா, மீண்டும் வீடு திரும்பவில்லை.
கலக்கமடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும், அவரை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. எனவே லோகாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் தேட துவங்கினர்.
அனுசூயா காணாமல் போன, நான்கு நாட்களுக்கு பின், வர்ச்சகல் கிராமம் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில், அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் அங்கு சென்று, உடலை மீட்டனர். கொலையாளிகளை தேடுகின்றனர். அனுசூயாவுக்கு, ஹலகலி கிராமத்தை சேர்ந்த சோமண்ணாவுடன், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
அனுசூயாகாணாமல் போன அன்று, சோமண்ணாவுடன் இருந்ததாகவும், இவரே அனுசூயாவை அடித்து இழுத்து சென்றதாகவும், இவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதை போலீசாரிடம் கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுத்து, அனுசூயாவை காப்பாற்றவில்லை என, குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பாகல்கோட் எஸ்.பி., சித்தார்த் கோயல் உட்பட, உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அனுசூயாவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி, கொலையாளி சோமண்ணாவை கைது செய்யும்படி வலியுறுத்தினர்.
கைது செய்வதாக எஸ்.பி., உறுதி அளித்ததால், போராட்டத்தை நிறுத்தினர்.
