மொபைல் போனை பறித்த குரங்கு: சிவகங்கை மலையில் பரபரப்பு
மொபைல் போனை பறித்த குரங்கு: சிவகங்கை மலையில் பரபரப்பு
ADDED : ஜூலை 28, 2026 01:59 AM
நெலமங்களா: சி வகங்கை மலைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரின் மொபைல் போனை, குரங்கு பறித்து கொண்டு கோவில் கோபுரத்தின் மீது ஏறி ஆட்டம் காட்டியது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், சிவகங்கை மலை இயற்கை காட்சிகள் நிறைந்த, சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். மலையில் உள்ள சிவன் கோவிலுக்கும், பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.
சிவகங்கைக்கு நேற்றும் அதிகமான சுற்றுலா பயணியர் வந்தனர். இவர்களில் இளம் பெண் ஒருவர், மொபைல் போனில் பேசியபடி, இயற்கையை ரசித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு, பெண்ணின் கையில் இருந்த மொபைல் போனை பறித்து கொண்டது. அதிர்ச்சியடைந்த அவர், என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்தார்.
இதை பார்த்த மற்ற சுற்றுலா பயணியர், குரங்கை மிரட்டி மொபைல் போனை பறிக்க முயற்பட்டனர். ஆனால் குரங்கு மொபைல் போனுடன், கோவில் கோபுரம் மீது ஏறி அமர்ந்து கொண்டு, போனுடன் சேட்டை செய்தது. சில இளைஞர்கள் குரங்குக்கு பழங்கள், உணவு பொருட்கள் காட்டி கீழே வரவழைக்க முயற்சித்தும் பயன் இல்லை.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் காட்டிய குரங்கு, மேலிருந்து மொபைல் போனை கீழே வீசியது. விலை உயர்ந்த மொபைல் போன், மீண்டும் கிடைத்ததால் இளம் பெண் மகிழ்ச்சி அடைந்தாலும், போன் ஓரளவு சேதம் அடைந்ததால் வருத்தம் அடைந்தார்.
சிவகங்கை மலைக்கு வந்த சுற்றுலா பயணியருக்கு, குரங்கின் குறும்புத்தனம் நல்ல பொழுதுபோக்காக இருந்தது. பலரும் இந்த காட்சியை, மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
