ADDED : ஜூலை 28, 2026 01:59 AM
கோரமங்களா: குடிபோதையில் இளம் பெண் ஒருவர், மதுக்கடை முன் செய்த ரகளையால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு கோரமங்களாவில் வார நாட்களை விட விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் கூடுவர்.
இங்கு பல மதுபான கடைகள், பப்கள் உள்ளன. விடுமுறை நாட்களில் அதிகளவில் இங்கு இளைஞர்கள், இளம் பெண்கள் கூடுவர்.
நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் ஒருவர், தன்னுடன் வந்திருந்த நண்பருடன் தகராறில் ஈடுபட்டார். சாலையில் நின்று கொண்டு, சத்தம் போட்டு கொண்டிருந்தார்.
இதனால் வாகன ஓட்டிகள், அவ்வழியாக நடந்து சென்றவர்கள் வேடிக்கை பார்க்க துவங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவருடன் வந்திருந்த நண்பர், 'அமைதியாக இரு; சத்தம் போடாதே' என்று பெண்ணின் கையை பிடித்து சாலை ஓரத்துக்கு அழைத்து வந்தார். ஆனால், அவரின் கையை தட்டிவிட்டு, மீண்டும் சாலைக்கு வந்து சத்தமாக சண்டை போட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இளம் பெண்ணின் ரகளையை, அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் படம் பிடிப்பதை அறிந்தும் கவலைப்படவில்லை. அவருடன் வந்த நண்பர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து சென்றார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவுக்கு, பலரும் அப்பெண்ணின் நடவடிக்கையை கண்டித்தனர். சிலர், 'பெண்ணின் நடவடிக்கை பெங்களூரு நகரின் கண்ணியத்தை குறைக்கிறது' என்றனர். சிலர், அப்பெண் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
