ADDED : ஏப் 01, 2026 03:46 AM

தங்கவயல்: வனப்பகுதிகளில் இருந்து மாரிகுப்பம் பகுதிக்குள் ஏராளமான குரங்குகள் வந்து உள்ளன. வீடுகளில் புகுந்து பலரின் நிம்மதியை கெடுத்து வருகின்றன.
தங்கவயல் பெமல்நகர் முதல் மாரிகுப்பம் வரை, குரங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து சேர்ந்துள்ளன. இதில் மாரிகுப்பம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் மிக அதிகமாக உள்ளது. மரங்கள், கம்பிகளில் தாவி குதித்து தொல்லைகள் கொடுத்து வருகின்றன.
ராபர்ட்சன்பேட்டை முதல் கிராஸ் பகுதியில், தினமும் பால் பண்ணையில் பால் வாங்க வருவோரை மிரள வைக்கின்றன. கடையில் நுழைந்து பால் பாக்கெட்டுகளை பறித்து செல்கின்றன. குரங்குகளை விரட்ட, பால் விற்பனையாளர்கள் போராடுகின்றனர்.
மார்க்கெட் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவோர், பயந்தபடியே வாங்கி செல்ல வேண்டி உள்ளது. மாரிகுப்பம் ரயில் நிலையத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளை காணலாம். இங்கு ரயில் வந்து நின்றதும், ரயில் பெட்டிகளில் ஏறி பயணியரின் லக்கேஜ்களை இழுத்து நாசப்படுத்தி வருகின்றன. ரயில்கள் இல்லாத நேரத்தில் இவைகளின் அடைக்கலமே ரயில் நிலையம் தான். இங்கு பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் கையில் தடியுடன் தான் நடமாடுகின்றனர்.
மாரிகுப்பம் சவுத் பிளாக், 'ஏ' பிளாக், ஓல்டு 'பி' பிளாக், ஆர்.டி.பிளாக், செல்லப்பா லைன் ஆகிய பகுதிகளில் வீடுகளை திறந்து வைக்க பலரும் அச்சப்படுகின்றனர்.
குரங்குகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
