/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மது குடிக்க மகள் எதிர்ப்பு கொலை செய்த தாய் கைது
/
மது குடிக்க மகள் எதிர்ப்பு கொலை செய்த தாய் கைது
ADDED : பிப் 11, 2026 06:21 AM

யாத்கிர்: 'மது குடிக்க வேண்டாம்' என்று அறிவுரை கூறிய மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.
யாத்கிர் மாவட்டம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் நிர்மலா, 40. இவரது கணவர் மல்லையா, தனியாக வசித்து வந்தார். மகள் பிரதிபா, 11, தாயார் நிர்மலாவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பிரதிபா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, அவரது தாயார் கதறினார். கதறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இது தொடர்பாக யாத்கிர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்மலாவிடம் போலீசார் முதலில் விசாரித்த போது, 'ஜூஸ் குடிக்க 15 ரூபாய் கேட்டாள். தரமுடியாது' என்று கூறியதால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தார்.
பின், பிரதிபா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், 'பிரதிபா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்' என்பது தெரியவந்தது.
இதையடுத்து தாய் நிர்மலாவிடம் போலீசாரின் தொடர்ந்து விசாரித்தனர். பதிலளிக்க முடியாமல் திணறிய நிர்மலா, மகளை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
போலீசார் கூறியதாவது:
நிர்மலா குடிக்கு அடிமையானவர். வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை, மதுவுக்கே செலவழித்து வந்தார். இதனால், வீட்டை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. அவரது மகள் பிரதிபா, இவ்விஷயத்தில் தனது தாயாருக்கு பலமுறை அறிவுரை கூறியும் கேட்கவில்லை.
நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்ற நிர்மலா, மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை கவனித்த மகள், 'சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கே செலவழித்தால், குடும்பத்தை யார் காப்பாற்றுவது' என்று கேட்டுள்ளார். இதனால், கோபம் அடைந்த நிர்மலா, மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடி உள்ளார். இதையடுத்து, தாய் நிர்மலா கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

