ADDED : செப் 02, 2026 11:05 PM
தலகட்டபுரா: செயற்கை முறையில், 24 ஆண்டுக்கு பின் பிறந்த, நான்கு மாத பெண் குழந்தைகளை தண்ணீரில் முழ்கடித்து கொலை செய்து, தற்கொலைக்கு முயற்சித்த தாய் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின் தலகட்டபுராவில் வசிப்பவர் ராமலிங்க ப்பா, 50. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கும், உமாதேவி, 44, என்பவருக்கும், 2002ல் திருமணம் நடந்தது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகி யும், தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. எனவே செயற்கை முறை கருத்தரிப்பில், குழந்தை பெற முடிவு செய்தனர். இதற்கான சிகிச்சை பெற்றனர்.
செயற்கை முறையில் கருத்தரித்த உமாதேவிக்கு, நடப்பாண்டு மே 5ம் தேதியன்று, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆரம்பத்தில் குழந்தைகளை மகிழ்வோடு பராமரித்த உமாதேவிக்கு, நாளடைவில் ஆர்வம் குறைந்தது. தன் தனிமைக்கு குழந்தைகள் தொந்தரவாக இருப்பதாக கருதினார். குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்க்கும்படி, கணவரிடம் கூறினார்.
மனைவியின் விசித்திரமான நடவடிக்கையால், வருத்தமடைந்த ராமலிங்கப்பா, 'நிமான்ஸ்' மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.
'பிரசவத்துக்கு பிந்தைய ஹார்மோன்களின் மாற்றத்தால், உமாதேவி இப்படி நடந்து கொள்கிறார்' என, டாக்டர்கள் கூறினர்.
ராமலிங்கப்பா நேற்று முன் தினம் காலை, பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார், மதியம் உமாதேவி, தன் இரட்டை குழந்தைகளை, நீர் நிரம்பிய பக்கெட்டில் மூழ்கடித்து கொலை செய்தார்.
தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது வீட்டுக்கு வந்த ராமலிங்கப்பா, மனைவியையும், குழந்தைகளையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறினர். உமாதேவிக்கு சிகிச்சை தொடர்கிறது.
தலகட்டபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.
