/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரசவத்துக்கு பின் தாய் மரணம் ரத்த குரூப் குளறுபடி என புகார்
/
பிரசவத்துக்கு பின் தாய் மரணம் ரத்த குரூப் குளறுபடி என புகார்
பிரசவத்துக்கு பின் தாய் மரணம் ரத்த குரூப் குளறுபடி என புகார்
பிரசவத்துக்கு பின் தாய் மரணம் ரத்த குரூப் குளறுபடி என புகார்
ADDED : செப் 18, 2025 11:05 PM

சிக்கபல்லாபூர்: பெண்ணின் ரத்த குரூப்பில் குழப்பம் ஏற்பட்டதால் பிரசவத்துக்கு பின் தாய் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் புலகானஹள்ளி கிராமத்தில் வசித்தவர் பாக்யம்மா, 30. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த 15ம் தேதி, பிரசவத்துக்காக கவுரிபிதனுார் தாய், சேய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிரசவம் முடிந்த பின், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தது; கடுமையான ரத்த போக்கும் ஏற்பட்டது. அப்போது தவறான குரூப் ரத்தம் கொடுத்ததால், பாக்யம்மா இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரசவத்துக்கு முன் பாக்யம்மா, அல்லிபுரா ஆரம்ப சுகாதார மையத்தில், அனைத்து பரிசோதனைகளும் செய்து கொண்டிருந்தார். ஆவணங்களில் ரத்த குரூப் 'பி - பாசிட்டிவ்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கவுரிபிதனுார் தாய், சேய் நல மருத்துவமனையில் பிரசவ நேரத்தில், ரத்த பரிசோதனை செய்த போது, பி - நெகட்டிவ் என, அறிக்கை வந்தது. பிரசவத்துக்கு பின், அதிக ரத்தப்போக்கு இருந்ததால், அவருக்கு ஓ - பாசிட்டிவ் ரத்தம் செலுத்தினர்.
குற்றச்சாட்டு கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூரின் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, மாவட்ட சுகாதார அதிகாரி சந்தோஷ் பாபு கூறியதாவது:
பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் எடை அதிகம் இருக்கும் போது, தாய்க்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்படுவது சகஜம். இது அவர்களின் இறப்புக்கு காரணமாகிறது. பாக்யம்மா விஷயத்தில், ரத்த குரூப் விஷயத்தில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அவசர நேரம் என்பதால், தாயை காப்பாற்றும் நோக்கில், சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகப்பேறு டாக்டர் ஸ்வேதா அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு, 4 ஆண்டு அனுபவம் உள்ளது. அவர் சிசேரியன் செய்யாமல், வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால், வழியில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். எனவே அவரது ரத்த குரூப்பை தெரிந்து கொள்ளாமல், பிரசவம் நடத்தினர்.
தாயின் ரத்தப்போக்கு குறையாததால், அவரது கர்ப்பப்பையை அகற்ற முடிவு செய்தனர். அப்போது ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதால், அவரது ரத்த குரூப்பை பரிசோதித்தனர். பி - நெகட்டிவ் என, தெரிந்தது. தாய் கார்டில் பி - பாசிட்டிவ் என, குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு பி - நெகட்டிவ் ரத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் அந்த குரூப் ரத்தம் இல்லை. எனவே அனைத்து குரூப்புக்கும் பொருந்த கூடிய, ஓ - பாசிட்டிவ் ரத்தம் செலுத்தினர்.
அப்பெண்ணுக்கு குறைந்த ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் இருந்தது. அவரை வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பிய போது, அவர் உயிரிழந்தார். இறந்த பெண்ணின் மருத்துவ ஆவணங்கள் குறித்து விசாரிக்க டாக்டர்கள் குழு அமைக்கப்படும்.
நிவாரணம் இக்குழுவினர் ஆய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பர். அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அவரது கணவருக்கு அரசு பணி வழங்க, அரசிடம் சிபாரிசு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.