கொலை வழக்கு குற்றவாளிக்கு மருத்துவமனையில் ராஜ உபசரிப்பு
கொலை வழக்கு குற்றவாளிக்கு மருத்துவமனையில் ராஜ உபசரிப்பு
ADDED : ஜூன் 10, 2026 02:39 AM
தார்வாட்: மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் பைரோஸ் பதான் கொலை வழக்கில், கைதான முக்கிய குற்றவாளிக்கு, அரசு கிம்ஸ் மருத்துவமனையில் ராஜ உபசரிப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் பைரோஸ் பதான், 14 பேர் கொண்ட கும்பலால், ஏப்., 10ல் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான மைனுதீன் நதாப்பிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு முன், தார்வாட் மத்திய சிறையில் இருந்து ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடி மொபைல் போனில் பேசுவதும், அவர் அருகில் மதுபான பாட்டில்கள் இருக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது.
சிறை விதிகள்படி, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், மொபைல் போனை பயன்படுத்த அனுமதியில்லை. ஆனால் மைனுதின் நதாப்புக்கு மொபைல் போன் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அது தவிர, இந்த மொபைல் போன் மூலம், கொல்லப்பட்ட பைரோஸ் பதான் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த பைரோஸ் பதான் குடும்பத்தினர், கொலை குற்றத்தில் கைதானவரிடம் மொபைல் போன் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
