ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத முஸ்லிம் மாணவியருக்கு அனுமதி
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத முஸ்லிம் மாணவியருக்கு அனுமதி
ADDED : மே 18, 2026 11:24 PM
பெங்களூரு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுத்தேர்வில், முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு 2021ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தடையை மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இதன் மூலம் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப், பூணுால், ருத்ராட்சம் அணிந்து வர மாணவ, மாணவியருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான மறுதேர்வு நேற்று மாநிலம் முழுதும், 358 மையங்களில் நடந்தது. 1.15 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அப்போது, முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்தவாறு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மையங்களில் குழப்பமின்றி தேர்வுகள் நடந்தன. கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
