ADDED : செப் 19, 2026 11:35 PM
பெங்களூரு: மைசூரு தசராவை ஒட்டி, 19 நாட்கள் விடுமுறை அளித்து, பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளி கல்வி எழுத்தறிவு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:
நடப்பு கல்வியாண்டுக்கான தசரா விடுமுறை 19 நாட்கள் வழங்கப்படுகின்றன. இது, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் துவக்க உயர் நிலைப்பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி பொது விடுமுறை நாளாகும். அக்., 3ம் தேதி முதல், அக்., 21ம் தேதி வரை, 19 நாட்கள் தசரா விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்., 22ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
இந்த கல்வியாண்டின் இரண்டாம் பருவம், அக்., 22ம் தேதி முதல், 2027 ஏப்., 10ம் தேதி வரை நடக்கிறது. ஏப்., 11ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது.
அதே வேளையில், உள்ளூர் வானிலை அல்லது மாவட்டத்தின் தேவையை பொறுத்து, விடுமுறை நாட்களில் சிறு மாற்றங்களை செய்ய அந்தந்த மாவட்ட துணை இயக்குநர்களுக்கு அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கல்வி துறையின் இந்த அறிவிப்பு, பண்டிகை கொண்டாட்டங்கள், பயணங்களுக்கு திட்டமிடும் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
