நாயை அடித்து கொன்றவர் மீது வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ்
நாயை அடித்து கொன்றவர் மீது வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ்
ADDED : ஆக 20, 2026 11:48 PM
ஹுளிமாவு: குட்டி ஈன்ற சில மணி நேரங்களில், நாயை அடித்து கொன்றவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின், தொட்டகம்மனஹள்ளியில் வசிப்பவர் மஹேஸ்வரி. இவர் பள்ளி ஒன்றில், அட்டென்டராக பணியாற்றுகிறார்.
இவர் ஒன்பது ஆண்டுகளாக, பொமரேனியன் இன நாயை வளர்க்கிறார். இதற்கு, 'ஜூலி' என, பெயர் வைத்து, தன் மகளை போல அன்பு காட்டினார்.
ஆகஸ்ட் 14ம் தேதி மதியம், ஜூலி இரண்டு குட்டிகளை ஈன்றது.
மாலையில் வாசலில் இருந்த ஜூலி குறைத்தபடி இருந்தது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் பால்ராஜ் கோபமடைந்தார்.
இரும்புத்தடியால் ஜூலியின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த நாய், சம்பவ இடத்தில் உயிரிழந்தது.
இதை காப்பாற்ற சென்ற மஹேஸ்வரி, அவரது கணவர் மற்றும் மகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இரண்டு குட்டிகள் தாய்ப்பால் கிடைக்காமல், அடுத்தடுத்த நாட்களில் இறந்தன. கண்ணெதிரே நடந்த
சம்பவத்தால், மஹேஸ்வரி மனதளவில் பாதிப்படைந்துள்ளார். அந்த வீட்டை காலி செய்து விட்டு, தன் அண்ணனின் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
நாயை கொன்றது, தங்களை தாக்கியது குறித்தும், ஹுளிமாவு போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.
போலீசாரும் பால்ராஜ், அவரது மனைவி கனிகம்மா மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
