'நம்பர் ஒன்' சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' ரயில்
'நம்பர் ஒன்' சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' ரயில்
ADDED : மே 12, 2026 06:54 AM

பெங்களூரு: 'வந்தே பாரத்' ரயில்களில், சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் ரயில், அதிக வருவாயை ஈட்டி, பெரும் வரவேற்பை பெற்ற ரயிலாக திகழ்கிறது.
சென்னை - மைசூரு இடையே, 2022 நவம்பர் 11ம் தேதி தென்னிந்தியாவின் முதல், 'வந்தே பாரத்' ரயில் சேவை (எண் 20607/20608) துவங்கி வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மிகவும் வெற்றிகரமான ரயில் சேவையாக இந்த வழித்தடம் விளங்குகிறது.
119.8 சதவீதம் மூன்றாண்டுகளைக் கடந்த நிலையில் படிப்படியாக மக்களின் வாழ்வில் வெற்றிகரமாக ஒன்றிணைந்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.
கடந்த நிதியாண்டில் முன்பதிவானது சராசரியாக, 119.8 சதவீதம் இருந்தது. இந்த ரயிலில், 4 லட்சத்திற்கும் அதிகமான பயணியர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரயில்வேக்கு, 41.2 கோடி ரூபாய் வருவாயை தந்துள்ளது.
அதேவேளையில் மைசூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயிலில், 3.9 லட்சம் பயணியர் பயணம் செய்துள்ளனர். 39.6 கோடி ரூபாய் வருவாயைத் தந்துள்ளது. பயணியரிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த வழித்தடத்தில் இரண்டாவது 'வந்தே பாரத்' சேவையை (ரயில் எண் 20663 / 20664) ரயில்வே அறிமுகப்படுத்தியது.
இந்த ரயில், 'வந்தே பாரத்' ரயில் சேவைகளிலேயே மிகவும் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட சேவையாக உருவெடுத்துள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு 127 சதவீதமாக விகிதத்தை எட்டியதோடு, 2 லட்சத்திற்கும் அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றுள்ளது.
16 பெட்டிகளாக அதிகரிப்பு பெங்களூரு - ஹைதராபாத் 'வந்தே பாரத்' சேவையும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எட்டுப் பெட்டிகளுடன் இயக்கப்பட்டபோது, 100 சதவீதத்திற்கும் அதிகமான பயணியர் முன்பதிவு செய்த நிலையில் 16 பெட்டிகளைக் கொண்ட ரயிலாக மாற்றப்பட்டது.
இதனால் இரு மார்க்கங்களிலும் 90 சதவீத பயணியருடன் இந்த ரயில் பயணத்தைத் தொடர்கிறது.
பெங்களூரில் இருந்து பெலகாவி; மதுரைக்கு இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இவை முறையே, 64.3, 78.9 சதவீத பயணியருடனே இயக்கப்படுகின்றன.
சென்னை வந்தே பாரத் ரயில் சேவைகளுக்கு இணையானதாக எர்ணாகுளம் வந்தே பாரத் ரயிலும் பயணியரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த சேவை, மார்ச் மாதம் வரை இரு திசைகளிலும் 1.7 லட்சத்திற்கும் அதிகமான பயணியரை ஏற்றிச் சென்றுள்ளது.
ஐந்து மாதங்களுக்குள், இந்தச் சேவை இரு திசைகளிலும் தலா 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ரயில்வேக்கு ஈட்டித் தந்துள்ளது. முன்பதிவும் 120 சதவீதத்தைத் தாண்டியது.
குறிப்பிடத்தக்க தேவை மற்றும் அதிக எண்ணிக்கையிலான காத்திருப்போர் பட்டியல் இருந்த போதிலும், இந்த ரயில் இன்னும் எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
