பா.ஜ., குறித்த ஆட்சேபனை பதிவு முதல்வர் மீதான வழக்கு ரத்து
பா.ஜ., குறித்த ஆட்சேபனை பதிவு முதல்வர் மீதான வழக்கு ரத்து
ADDED : ஜூன் 20, 2026 03:33 AM

பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில், 33 ஆண்டுகளுக்கு முன்பு, தார்வாடின் ஹூப்பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, 2024ம் ஆண்டு ஹிந்து அமைப்பின் ஸ்ரீகாந்த் பூஜாரி கைது செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ., தலைவர்கள், 'நாங்கள் கரசேவகர்கள், எங்களையும் கைது செய்யுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பதாகை ஏந்தி, போராட்டம் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கர்நாடக காங்கிரஸ் முகநுால் பக்கத்தில், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா புகைப்படத்தை பதிவிட்டு, 'நான் லஞ்சம் வாங்கி உள்ளேன்; என்னை கைது செய்யுங்கள்' என்றும்; எம்.எல்.ஏ., சுனில்குமார் புகைப்படத்தை பதிவிட்டு, 'நான் பரசுராமரின் வெண்கல சிலையை திருடி உள்ளேன்; என்னை கைது செய்யுங்கள்' என்றும் பதிவிடப்பட்டு இருந்தன.
இதுகுறித்து, பா.ஜ.,வின் சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் யோகேந்திரா அளித்த புகார் மீது, கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய முதல்வருமான சிவகுமார், சமூக ஊடக பிரிவு தலைவர் பி.ஆர்.நாயுடு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவானது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சிவகுமார், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து வந்தார்.
சிவகுமார் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரவீன் கவுடா வாதிடுகையில், ''பா.ஜ., தலைவர்கள் பற்றிய கேலி சித்திரத்தை என் மனுதாரர் வெளியிடவில்லை; கட்சியின் தலைவர் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது,'' என்று வாதிட்டார். எதிர் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறினார். சிவகுமார் தரப்பு வாதங்களை ஏற்று கொண்ட நீதிபதி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
