பி.பி.எல்., கார்டுகள் ரத்து 29ல் அதிகாரிகள் ஆய்வு
பி.பி.எல்., கார்டுகள் ரத்து 29ல் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 23, 2026 11:12 PM
தங்கவயல்: தங்கவயலில் பி.பி.எல்., எனும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்துள்ள விவகாரம் தொடர்பாக, பரிசீலனை செய்ய, மாநில உணவுத் துறை ஆணையர் ரவிகுமார், இம்மாதம் 29ம் தேதி வரவுள்ளார் என, உணவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தங்கவயலில், 4,000 பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து செய்துள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். இது உண்மையில்லை. ஜி.எஸ்.டி., வருமானவரி செலுத்துவோர், சொந்த வீடு, சொகுசு கார் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் உட்பட சிலர் பி.பி.எல்., கார்டுகள் வைத்துள்ளனர்.
இத்தகையோர் எண்ணிக்கை 1,070. இவர்களின் பி.பி.எல்., கார்டுகளை வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கான ஏ.பி.எல்., கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இவர்களில் யாரேனும் தவறாக பாதிக்கப்பட்டிருந்தால், மாநில உணவுத் துறை ஆணையர் ரவிகுமார், மாவட்ட, தங்கவயல் உணவுத் துறை அதிகாரிகள் பரிசீலிப்பர்.
பி.பி.எல்., கார்டுகள் ரத்தானவர்கள் உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 29 ம் தேதி காலை 10:00 மணிக்கு நகராட்சி அரங்கத்திற்கு வர வேண்டும். அதிகாரிகள் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
இவ்வாறு உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
