உணவுகளில் செயற்கை நிறம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
உணவுகளில் செயற்கை நிறம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
ADDED : மே 18, 2026 11:20 PM
பெங்களூரு: நடைபாதை உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பல்வேறு தின்பண்டங்களுக்கு, அபாயமான செயற்கை நிறங்கள் பயன்படுத்துவது, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்தது.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம், இனிப்புகள் உட்பட பல்வேறு உணவுகள், தின்பண்டங்களில் உடல் ஆரோக்கியத்துக்கு அபாயமான செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டன. இது புற்றுநோய் போன்ற அபாயமான நோய்களுக்கு காரணமாவதை, உணவு பாதுகாப்பு துறை கண்டுபிடித்தது.
எனவே எந்த உணவு, தின்பண்டங்கள், இனிப்புகள், கோபி மஞ்சூரியன், சிக்கன், மீன் கபாப்களிலும், செயற்கை நிறங்கள் பயன்படுத்துவதற்கு, 2024ல் மாநில அரசு தடை விதித்திருந்தது.
இந்த உத்தரவு சில நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் செயற்கை நிறங்கள் சேர்க்க துவங்கியுள்ளனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவ்வப்போது ஹோட்டல்கள், உணவகங்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர். நடைபாதைகளில் விற்கப்படும் பானிபூரி, மசாலா பூரி, ஜிலேபி, கேக், ஜாமுன் உட்பட, இனிப்பு பண்டங்கள், ஹோட்டல்களில் சட்னி, சாஸ், கோபி மஞ்சூரியன், கபாப் போன்ற உணவுகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனர்.
க டந்த இரண்டு ஆண்டுகளில், 3,505 உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சில உணவுகளில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டது, ஆய்வில் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள், உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, 2.22 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நிர்ணயித்த விதிமுறை களை ஹோட்டல்கள், உணவகங்கள் பின்பற்ற வேண்டும். உணவுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை, செயற்கை நிறங்களை சேர்க்க கூடாது. பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
