ADDED : மார் 06, 2026 05:24 AM

: மைசூரு மாவட்ட வனத்துறையில், அதிகாரிகளாக பணிபுரியும் டாக்டர் பி.ரமேஷ் குமார் மற்றும் மாலதி பிரியா தம்பதியின் மகள் பத்மபிரியா,14. இவர் தன் சிறுவயதில் இருந்தே டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். டென்னிஸ் விளையாடுவதில் அதீத ஆர்வம். கடுமையான பயிற்சிகளையும் எளிதில் செய்து முடிக்கும் திறன் படைத்தவர்.
மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகளில், பல ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார். ரகுவீர் பொன்னுசாமி, பவன் ஆகியோரிடம் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகிறார். இவர் சாகர் என்பவரிடம், உடற்பயிற்சிக்கான பயிற்சிகளையும் பெற்று வருகிறார்.
எரிநட்சத்திரம் பத்மபிரியா பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும், டென்னிஸ் போட்டி விளையாடும் போது, எதிராளி 'அடி பாவி' என கூறும் அளவிற்கு தீயாக செயல்படுவார். தன் முழு சக்தியையும் கொண்டு பந்தை அடிக்கும் போது, பந்து எரிநட்சத்திரம் போல வேகத்தில் செல்லும்.
இவர் மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்றார். இதன் காரணமாக, டில்லியில் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியான, 'பெனெஸ்டா ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - 2025' போட்டியில் கர்நாடகா சார்பாக பங்கேற்றார்.
இதில், 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் பரிசும், ஒற்றையர் பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றார். இதன் மூலம் மாநிலத்துக்கு தேசிய அளவில் பெருமையை சேர்த்து உள்ளார்.
வெளிச்சம் இதே சாம்பியன்ஷிப் தொடரில், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் போட்டியிலும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் பதக்கம் எதுவும் பெறவில்லை என்றாலும், தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
இதனால், பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் தற்போது தேசிய அளவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டென்னிஸ் பிரிவில் முன்னிலை வகிக்கிறார். தேசிய அளவின் பத்மபிரியாவின் பெயர் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவில், 14 வயதுக்கு உட்பட்ட டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசையில் முதலிடத்திலும்; ஆசியாவில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
இவர், தற்போது 14 வயதுக்கு உட்பட்ட இந்திய டென்னிஸ் அணிக்கு விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இலங்கையில் வரும் 28ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் ஐ.டி.எப்., ஆசியா அளவிலான டென்னிஸ்போட்டியில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்கிறார்.
இது, பத்மபிரியாவுக்கு பெருமையை தேடி தந்து உள்ளது. மேலும், மலேஷியாவில் ஏப்ரல், 21 முதல், 26 வரை நடக்கும் சர்வதேச அளவிலான ஜூனியர் டென்னிஸ் போட்டியிலும் நம் நாட்டின் சார்பாக பங்கேற்கிறார். இது, அவருக்கு மைசூரை கடந்து கர்நாடகா அளவில் பெயரை வாங்கி கொடுத்து உள்ளது.
- நமது நிருபர் -
