விவசாயிகளின் ரத்தத்தில் விஷம் மருத்துவர்கள் ஆய்வில் தகவல்
விவசாயிகளின் ரத்தத்தில் விஷம் மருத்துவர்கள் ஆய்வில் தகவல்
ADDED : ஆக 19, 2026 11:16 PM
ஹூப்பள்ளி: பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும், விவசாயிகளின் ரத்தத்தில் விஷத்தன்மை கலந்திருப்பது, மருத்துவ வல்லுநர்களின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர்.
பயிர்களை பூச்சிகள் பாழாக்காமல் இருக்க, விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கின்றனர். அவர்கள் எந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல், அபாயகரமான ரசாயன அம்சங்கள் உள்ள பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கின்றனர்.
இது, அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதை தீவிரமாக கருதிய, ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனை வல்லுநர்கள், விவசாயிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முன் வந்தனர்.
முதற்கட்டமாக, தார்வாட் மாவட்டத்தின் 13 விவசாயிகளை, ஆய்வுக்கு உட்படுத்தினர்.
கிம்ஸ் டாக்டர் ராம் கவலகுட்டா தலைமையிலான குழுவினர், விவசாயிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை நடத்தினர்.
பூச்சுக்கொல்லி மருந்து தெளித்து, 15 நாட்களுக்கு பிறகும், அந்த விவசாயிகளின் ரத்தத்தில் அபாயகரமான ரசாயன அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
விவசாயிகள் முகக்கவசம், கையுறை, பாதுகாப்பான உடைகளை பயன்படுத்தாமல், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கின்றனர்.
இதனால் விஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள், சருமம் மற்றும் சுவாசம் மூலமாக, உடலில் நுழையும்.
இதன் விளைவாக உடலின் உறுப்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
விஷத்தன்மை நிரந்தரமாக உடலிலேயே தங்குவதால், வரும் நாட்களில் சிறுநீரகம், இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
இதை கருதி, பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது, முகக்கவசம், கண்ணாடி, கையுறை, உடலை மறைக்கும் பாதுகாப்பு கவச உடை உட்பட, தேவையான பாதுகாப்பு சாதனங்களை, கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இது, அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து முடித்த பின், கைகள் மற்றும் முகத்தை சோப்பு போட்டு, நன்றாக கழுவ வேண்டும்.
பயன்படுத்திய உடையை, மற்ற உடைகளுடன் கலக்காமல், தனியாக துவைப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
