/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணை தாக்கிய உறவினர்கள் கண்டு கொள்ளாத போலீசார்
/
பெண்ணை தாக்கிய உறவினர்கள் கண்டு கொள்ளாத போலீசார்
பெண்ணை தாக்கிய உறவினர்கள் கண்டு கொள்ளாத போலீசார்
பெண்ணை தாக்கிய உறவினர்கள் கண்டு கொள்ளாத போலீசார்
ADDED : பிப் 09, 2026 05:12 AM
ஹாசன்: ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின் பிராமணர் வீதியில் வசிப்பவர் சசிகுமார், 28. இவர் சில ஆண்டுகளுக்கு முன், அர்பிதா, 23, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓட்டுநர் பணி செய்த சசிகுமார், மனைவியை உதறிவிட்டு சென்றார்.
அர்பிதா குழந்தையுடன் வசிப்பதற்கு, வீட்டின் மாடியில் இருந்த அறை ஒன்றை, கணவர் வீட்டினர் கொடுத்தனர். கேன்டீனில் பணியாற்றி, அவர் குழந்தையை வளர்த்து வருகிறார்.
கணவரிடம் விவாகரத்தும், ஜீவனாம்சமும் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன், மாமனார் கோபாலஷெட்டி அவசர, அவசரமாக வீட்டையும், சொத்துகளையும் தன் இரண்டு மகள்களின் பெயரில் எழுதி வைத்தார். வீடு தங்களுக்கு சொந்தமானதும், இரண்டு மகள்களும், அர்பிதாவை வீட்டை விட்டு செல்லும்படி சித்ரவதை செய்தனர்.
நேற்று காலை அவர் வசிக்கும் மாடி அறையில் நுழைந்து, பொருட்களை வெளியே வீசினர். டிரம்மில் இருந்த தண்ணீரை கீழே கொட்டினர். அறையின் மேற்கூரையில் பொருத்தியிருந்த சிமென்ட் ஷீட்களை பிய்த்து எறிந்தனர். அர்பிதாவையும் கண் மூடித்தனமாக தாக்கினர்.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன், கணவரின் சகோதரிகள் செய்த அராஜகம் குறித்து, அவசர எண் 112ல் தொடர்பு கொண்டு, அர்பிதா உதவி கேட்டார். ஆனால் அங்கு வந்த போலீசார், அர்பிதாவை மிரட்டி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அரகலகூடு போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.

