முதுகலை கல்லுாரி மாணவி மர்மச்சாவு; கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு
முதுகலை கல்லுாரி மாணவி மர்மச்சாவு; கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 25, 2026 12:32 AM

கதக்: மருத்துவம் தொடர்பாக படித்து வந்த முதுகலை கல்லுாரி மாணவி சந்தேகத்திற்கிடமான விதத்தில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக, பெற்றோர் குற்றம் சாட்டினர்.
பாகல்கோட் மாவட்டத்தின், கத்தனகேரி கிராமத்தை சேர்ந்தவர் வீணா ஹானாபுரா, 25. இவர் கதக் நகரின் நாகாவி அருகில் உள்ள கிராம மேம்பாட்டு பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஹெச்., எனும், பொது மருத்துவம் தொடர்பாக, முதுகலை படித்து வந்தார். இங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். படிப்பில் திறமையானவர். அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவாகியும், வீணா அறையில் இருந்து வெளியே வரவில்லை. பல முறை கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த சக மாணவியர், விடுதி வார்டனிடம் கூறினர்.
அவர் போலீசாரை வரவழை த்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கட்டில் கம்பியில் துாக்கிட்ட நிலையில் வீணா இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப் பினர்.
தகவலறிந்து மாணவியின் பெற்றோர், மகளின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகள் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் தெரிவித்தனர்.
இது குறித்து, மாணவியின் தந்தை ராமப்பா ஹானாபூர் அளித்த புகாரில் கூறியதாவது:
என் மகள் டாக்டராக வேண்டும் என கனவு கண்டார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. அவரது முகத்தில் காய அடையாளங்கள் உள்ளன. மூக்கில் ரத்தம் வந்துள்ளது.
துாக்கிட்ட போது அவர் அணிந்திருந்த உடையும் அவருடையது அல்ல. மேலும், துாக்கிட்ட போது, அவரின் இரண்டு கால்களும், தரையில் மண்டியிட்ட நிலையில் இருந்தன.
மகள் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருப்பது, என் மகளின் கையெழுத்து அல்ல. அவர் தற்கொலை செய்யவில்லை. அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரும், அடுத்தகட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.
