ADDED : ஜூன் 07, 2026 11:26 PM

பெங்களூரு: வட மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சவதத்தி ரேணுகா எல்லம்மா கோவிலில், புரோக்கர்கள் தொல்லையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகா, புறநகரில் ரேணுகா எல்லம்மா கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ரேணுகா எல்லம்மா கோவில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், புரோக்கர்கள் தலையீடு அதிகரிக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், ரேணுகா எல்லம்மாவை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், புரோக்கர்கள், பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு, அவர்களை நேரடியாக தரிசனத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். வசதியானவர்கள் பணம் கொடுத்துவிட்டு, நேரடியாக கர்ப்ப கிரஹத்துக்கு சென்று, அம்பாளை தரிசனம் செய்கின்றனர்.
பணம் இல்லாத பக்தர்கள், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. புரோக்கர்கள் பணம் வசூலித்து கொண்டு, பக்தர்களை உள்ளே அழைத்து செல்வதால், மற்ற பக்தர்கள் தேவையின்றி காத்திருக்க வேண்டியுள்ளது.
புரோக்கர்கள் தொல்லையை தடுத்து நிறுத்தும்படி, பக்தர்கள் வலியுறுத்தியும் பயன் இல்லை. கோவில் நிர்வாக அதிகாரிகள், ஊழியர்களும், புரோக்கர்களுக்கு உடந்தையாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவிலின் மேம்பாட்டுக்கு, மாநில அரசு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. ஆனால் சாதாரண பக்தர்கள், அம்பாளை தரிசிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர். பக்தர்கள் பலரும், புரோக்கர்கள் செய்யும் அநியாயத்தை, தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்.
புரோக்கர்களை கட்டுப்படுத்தி, அம்பாளை தரிசிக்க வழி செய்யும்படி பெலகாவி மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக ஆணைய தலைவருமான முகமது ரோஷனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
