/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெங்களூரு வீட்டில்... ரெய்டு!: பல்லாரி நகைக்கடையிலும் கேரள எஸ்.ஐ.டி., அதிரடி
/
உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெங்களூரு வீட்டில்... ரெய்டு!: பல்லாரி நகைக்கடையிலும் கேரள எஸ்.ஐ.டி., அதிரடி
உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெங்களூரு வீட்டில்... ரெய்டு!: பல்லாரி நகைக்கடையிலும் கேரள எஸ்.ஐ.டி., அதிரடி
உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெங்களூரு வீட்டில்... ரெய்டு!: பல்லாரி நகைக்கடையிலும் கேரள எஸ்.ஐ.டி., அதிரடி
ADDED : அக் 25, 2025 11:02 PM

பெங்களூரு: சபரிமலை அய்யப்பன் கோவில், துவாரபாலகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசத்தில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கு குறித்து கேரள மாநிலத்தின் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இவர்கள் நேற்று, சென்னையை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெங்களூரு வீடு, பல்லாரியில் உள்ள ஒரு நகைக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர். 476 கிராமை நகைக் கடையில் இருந்து மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று அய்யப்பனை தரிசித்து வருகின்றனர். சமீபத்தில் மாத பூஜையை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இருமுடி சுமந்து, பதினெட்டு படியேறி அய்யப்பனை தரிசித்தார்.
சபரிமலைக்கு தொழிலதிபர் விஜய் மல்லையா, கிலோ கணக்கில் தங்கத்தை தானமாக வழங்கியிருந்தார். அதைவைத்து, கருவறையின் கூரை, பிரதான கதவுகள், கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க தகடு வேயப்பட்டது.
மாயம் இந்நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க தகடுகள் கழற்றப்பட்டு, மீண்டும் பொருத்தியபோது, 4 கிலோ அளவுக்கு தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
விசாரணையில் இறங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க தகடுகளுக்கான பராமரிப்பு செலவை ஏற்ற, பெங்களூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், வரும் 30ம் தேதி வரை காவலில் எடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்கின்றனர்.
* 2 லட்சம் உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பல்லாரி கவுல் பஜாரில் உள்ள ரோட்டம் ஜுவல்லரி உரிமையாளர் கோவர்தனுடன் தனக்கு நட்பு இருப்பதாகவும், திருடிய நகைகளில் 476 கிராமை அவரிடம் விற்றதாக கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு உன்னிகிருஷ்ணனை, பல்லாரிக்கு அழைத்துச் சென்ற, எஸ்.ஐ.டி., அதிகாரிகள், ரோட்டம் ஜுவல்லரியில் சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளர் கோவர்தனிடம் விசாரித்துவிட்டு, நேற்று காலை பெங்களூரு வந்தனர்.
ஸ்ரீராமபுரம் 2வது கிராஸ் 7வது மெயின் ரோட்டில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில், உன்னிகிருஷ்ணன் போத்தியின் வீடு உள்ளது. அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
இரண்டு மணி நேரம் நடந்த சோதனையின்போது, வீட்டில் இருந்து தங்க கட்டிகள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையிலும் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
* தங்க முலாம் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய சோதனை குறித்து, பல்லாரி நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் நேற்று அளித்த பேட்டி:
நான் அய்யப்ப பக்தன். சிறு வயதில் இருந்து சபரிமலைக்கு செல்கிறேன். 2019ல் உன்னிகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்ட சில மாதங்களில், உன்னிகிருஷ்ணன் என்னிடம் செல்போனில் பேசினார்.
அய்யப்ப சுவாமி கோவில் கதவு பாழடைந்துள்ளது. கோவிலுக்குள் பாம்புகள் செல்கின்றன. அதனால், புதிய கதவு பொருத்த வேண்டும். தங்க முலாம் பூசப்பட்ட கதவை செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். புதிய கதவு செய்வதற்காக, கேரளாவில் இருந்து மரம் வாங்கினோம். பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், கதவை வடிவமைத்து தங்க முலாம் பூசினோம்.
* கதவு தரிசனம் பின், அந்த கதவை பல்லாரிக்கு கொண்டு வந்து, என் நகைக்கடையில் வைத்து பூஜை செய்தேன். இங்கிருந்து கதவை சபரிமலைக்கு அனுப்பும் முன், 1,000 பேருக்கு, கதவை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, 476 கிராம் தங்கம் வாங்கியதாக, என் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி புலனாய்வு குழு அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கும் சென்று, எனக்கு தெரிந்த சில தகவல்களை கூறி வந்தேன்.
தற்போது விசாரணை நடக்கிறது. நிறைய உண்மைகளை வெளியே சொல்ல முடியாது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். நான் தவறு செய்யவில்லை. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, 'உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, 476 கிராம் தங்கம் வாங்கினேன். அது கோவில் தங்கம் என்று தெரிந்திருந்தால் வாங்கி இருக்க மாட்டேன்' என, கோவர்தன் கூறியதாகவும், நகைக்கடையில் நாணய வடிவில் இருந்த, 476 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுபற்றி உறுதியான தகவல் இல்லை.

