ADDED : செப் 19, 2026 02:22 AM
கோலார்: கோலார் மாவட்ட மருத்துவமனைக்குள், மழை வெள்ளம் புகுந்ததால், நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.
கோலார் மாவட்ட மருத்துவமனை கட்டடம் மிகவும் பழமையானது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், வெள்ளம் புகுந்து பிரச்னையை ஏற்படுத்துகிறது; மேற்கூரையில் நீர் கசிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன், கோலாரில் பலத்த மழை பெய்து, மக்களை திணறடித்தது. அப்போதும், மாவட்ட மருத்துவமனையில் மழை வெள்ளம் புகுந்தது. மேற்கூரையில் இருந்தும் தண்ணீர் கசிந்ததால், மெத்தைகள் நனைந்தன. தரையில் ஏரி போல தண்ணீர் தேங்கியது.
இதனால், வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரை கொடுக்கவும், ஊசி போடவும் மருத்துவமனை ஊழியர்கள் திண்டாடினர். மருத்துவமனையில் சரியான அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
ஏழை நோயாளிகள், அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். ஆனால், இத்தகைய மருத்துவமனையில் மழை வெள்ளம் புகுவதை தடுக்கும் வசதியும் இல்லை. உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
