முதல்வர் ஆலோசனை கூட்டம் ராமலிங்கரெட்டி புறக்கணிப்பு
முதல்வர் ஆலோசனை கூட்டம் ராமலிங்கரெட்டி புறக்கணிப்பு
ADDED : ஜூலை 15, 2026 12:37 AM
பெங்களூரு: பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் சிவகுமார் நடத்திய ஆலோசனை கூட்டத்தை, அமைச்சர் ராமலிங்கரெட்டி புறக்கணித்துள்ளார்.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிகளுக்கும், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் இறுதி கெடு விதித்திருந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு, புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டிக்காவிட்டால், ஆகஸ்ட் 31 க்குள் தேர்தல் நடத்தும் சூழ் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரு நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, அகற்றும் பணி மும்முரமாக நடக்கிறது.
இதனால் அரசு மீது வியாபாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர். குப்பைகள் அகற்றுவது, சாலை பள்ளங்கள் உட்பட பல பிரச்னைகள், பெங்களூரில் உள்ளன.
பிரச்னைகள் பற்றி விவாதிக்க, பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் சிவகுமார் நேற்று மாலை, அரசு இல்லமான கிருஷ்ணாவில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அமைச்சர்கள் ஜார்ஜ், கிருஷ்ணபைரே கவுடா உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆஜரான நிலையில், மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இன்னொரு அமைச்சர் பைரதி சுரேஷ், முன்னாள் அமைச்சரும், சாம்ராஜ்பேட் எம்.எல்.ஏ.,வுமான ஜமீர் அகமது கான் ஆகியோர் வரவில்லை.
பைரதி சுரேஷுக்கு வேறு நிகழ்ச்சி இருந்ததால், அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் ராமலிங்கரெட்டியும், ஜமீர் அகமது கானும், முதல்வர் மீதான அதிருப்தியால் கூட்டத்திற்கு வரவில்லை. பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதவி கிடைக்காததால், ராமலிங்கரெட்டியின் அதிருப்தி இன்னும் அப்படியே உள்ளது.
அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், ஜமீர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
