/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மங்களூரு தமிழ் சங்கத்துக்கு கட்டடம் உதவுவதாக ராம்பிரசாத் மனோகர் உறுதி
/
மங்களூரு தமிழ் சங்கத்துக்கு கட்டடம் உதவுவதாக ராம்பிரசாத் மனோகர் உறுதி
மங்களூரு தமிழ் சங்கத்துக்கு கட்டடம் உதவுவதாக ராம்பிரசாத் மனோகர் உறுதி
மங்களூரு தமிழ் சங்கத்துக்கு கட்டடம் உதவுவதாக ராம்பிரசாத் மனோகர் உறுதி
ADDED : ஜன 26, 2026 05:15 AM

மங்களூரு: மங்களூரில் தமிழ் சங்க கட்டடம் கட்ட உதவுவதாக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் உறுதி அளித்து உள்ளார்.
மங்களூரு நகர் உருவா ஸ்டோர் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனில், மங்களூரு தமிழ் சங்கம் சார்பில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவரான ராம்பிரசாத் மனோகர், லெமூரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், இந்திய பேனா நண்பர்கள் பேரவை தலைவர் கருண், தஞ்சாவூர் பல்கலைக்கழ இசை துறை பேராசிரியர் நல்லசிவம், தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பவுசியா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பண்டிகையின் துவக்கத்தில் சர்க்கரை பொங்கல் வைத்து, பெண்கள் சூரிய வழிபாடு நடத்தினர். தமிழர் பாரம்பரியத்தை வலியுறுத்தும் விதமாக ஆண்கள் வேட்டி, சட்டையும், பெண்கள் சேலையும் அணிந்திருந்தனர். விழா நடந்த இடம் முழுதும் கரும்பு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நாதஸ்வரம் இசைக்கப்பட்டது.
பின், நடந்த நிகழ்ச்சியில் ராம்பிரசாத் மனோகர் பேசுகையில், ''மங்களூரில் இவ்வளவு தமிழர்கள் உள்ளனரா என்று நானே அசந்துபோகும் அளவுக்கு நிறைய பேர் வந்து உள்ளீர்கள். உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. மங்களூரு தமிழ் சங்கத்திற்கு கட்டடம் கட்டவும், உங்களுக்கு தேவையான உதவியை செய்யவும் தயாராக உள்ளேன்,'' என்றார்.
தொடர்ந்து சிறுவர், சிறுமியருக்கு கோணி பை ஓட்டப்பந்தயம், பெண்களுக்கு கோல போட்டி, ஆண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின், எட்டு மாணவர்களுக்கு கல்வி உதவி, இரண்டு பேருக்கு மருத்துவ உதவி என 30,000 ரூபாய் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாற்றப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் கருப்பையா, துணை தலைவர் சந்தோஷ், செயலர் செந்தில் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலர் ராஜ்குமார், பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

