ரேஷன் அட்டை இ - கே.ஒய்.சி., கெடு நீட்டிப்பு உணவு துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் உத்தரவு
ரேஷன் அட்டை இ - கே.ஒய்.சி., கெடு நீட்டிப்பு உணவு துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் உத்தரவு
ADDED : செப் 17, 2026 11:16 PM

பெங்களூரு: கர்நாடகாவில், ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின், இ - கே.ஒய்.சி., சரிபார்ப்பை முடிப்பதற்காக காலகெடுவை, அடுத்த மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து, உணவு துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் உத்தரவிட்டுள்ளார்.
போலி ரேஷன் அட்டைகள் மூலம், 'அன்னபாக்யா' திட்ட அரிசியை சிலர் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சரி செய்து, உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே, உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ரேஷன் அட்டைதாரர்கள் இ - கே.ஒய்.சி., செய்ய வேண்டும் என, உணவு மற்றும் பொது வினியோக துறை, கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.
இம்மாதம், 30ம் தேதியுடன் கே.ஒய்.சி., பணி நிறைவு பெற இருந்தது.
ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டையை, நியாய விலை கடைக்கு எடுத்து சென்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை எண்களை வழங்கி கைரேகை அல்லது கண் விழி சரிபார்ப்பு மூலம், கே.ஒய்.சி., செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதனால், ரேஷன் கடைகளில் கே.ஒய்.சி., பணிகளை மேற்கொள்ள கூட்டம் குவிந்தது.
சில இடங்களில் தொழில்நுட்ப காரணங்கள், 'சர்வர்' பிரச்னையால் கே.ஒய்.சி., செய்ய முடியாமல் போனதால், கே.ஒய்.சி., சரிபார்ப்பை முடிப்பதற்கான காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்று கொண்ட உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், கே.ஒய்.சி., சரிபார்ப்பை முடிப்பதற்கான காலகெடுவை, அடுத்த மாதம், 20ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தங்கள் ஒரு நாள் வேலையை, தினக்கூலி தொழிலாள ர்கள் இழப்பதை தடுக்கும் வகையில், அக்டோபர் 1ம் தேதி முதல், ரேஷன் கடைகளை காலை 7:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரையும் திறக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் கடையை திறக்காதவர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
