அனுமதியின்றி வைக்கப்பட்ட சித்தராமையா சிலை அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட சித்தராமையா சிலை அகற்றம்
ADDED : செப் 17, 2026 11:16 PM

கலபுரகி: கலபுரகியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இரவோடு, இரவாக வைக்கப்பட்ட சிலை, காலையில் அகற்றப்பட்டது.
கலபுரகி எஸ்.வி.பி., சதுக்கத்தில் நேற்று நடந்த கல்யாண கர்நாடகா உத்சவ கொண்டாட்டத்தில் பங்கேற்க முதல்வர் சிவகுமார் கலபுரகியில் நேற்று முன்தினம் தங்கினார். கலபுரகியில், கர்நாடக உயர் நீதிமன்ற கிளை உள்ள பகுதியான சித்தராமையா சதுக்கத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின், 9 அடி உயரம் உள்ள தங்க நிறத்திலான சிலை, நேற்று முன்தினம் இரவு வைக்கப்பட்டது.
இந்த சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தின் வழியாகவே முதல்வர் சிவகுமாரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை சிலை வைக்கப்பட்டிருப்பதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், அவ்விடத்திற்கு சென்றனர். அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, சித்தராமையா சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, லாரியில் ஏற்றி வருவாய் துறை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
எவ்வித அனுமதியுமின்றி, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இரவோடு இரவாக சிலை வைக்கப்பட்டதும், காலையில் அகற்றப்பட்டதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலையை நிறுவியது யார்; அவர்களை ஏவியது யார் என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
