ADDED : ஜூலை 18, 2026 11:05 PM

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது தொடரப்பட்ட தேர்தல் முறைகேடு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த, 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சால்வையை அணியும்படி வாக்காளர்களை கட்டாயப்படுத்தியதாகவும், அவர்களை மிரட்டியதாகவும், நந்தினி லே - அவுட் போலீசில், சாமுவேல் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக, முனிரத்னா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முனிரத்னா மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங் களையும் கேட்ட பின், அவர் கூறியதாவது:
இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள், முறையான காரணங்கள் இன்றி சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டத்தின், 363வது பிரிவு, சிறுவர்களை கடத்துவது தொடர்பானது. இருப்பினும், இவ்வழக்கில் எந்த சிறார்களும் கடத்தப்படவில்லை.
ஆனால் போலீசார், இந்த பிரிவில் வழக்கு பதிவு செய்தது சரியல்ல.
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குற்றச்சாட்டு போன்ற அற்பமான விஷயங்களில் விசாரணையை தொடர அனுமதிப்பது, அவமதிப்பதாகும். அத்துடன் சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதற்கு சமம்.
இவ்வழக்கில் சட்ட நடவடிக்கையை தொடர அனுமதிப்பது நீதிக்கு புறம்பான செயல். எனவே, அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தின் நீதித்துறை நடவடிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
