ADDED : ஆக 27, 2026 08:34 PM

ராம்நகர்: பிறந்து சில நாட்களே ஆன நான்கு சிறுத்தை குட்டிகள் கரும்பு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தாய் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சன்னப்பட்டணா தாலுகா, நேரலுார் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ், விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று கரும்பு அறுவடை நடந்தது. அப்போது, நான்கு சிறுத்தை குட்டிகள் கரும்பு தோட்டத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை பார்த்தனர்.
குட்டிகள் பிறந்து, ஐந்து நாட்களே ஆகியிருக்கும், இவற்றை மீட்டு சென்று வளர்ப்பதும் கடினம். இதனால், சிறுத்தை குட்டிகளை அந்த இடத்திலேயே வனத்துறை அதிகாரிகள் விட்டு விட்டனர்.
இதையடுத்து, தாய் சிறுத்தையை தேடும் பணிகள் நடந்தன. இருப்பினும், தாய் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தாய் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இப்பகுதியை சுற்றி யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
