ADDED : ஆக 20, 2026 11:56 PM
பெங்களூரு: ''எங்களுக்கான நியாயமான வரி பங்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்,'' என முதல்வர் சிவகுமார் கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் இங்கு யார் மீதும் புகார் கூற வரவில்லை. பொருளாதாரத்தை வழிநடத்தும் மாநிலங்களுக்கு உரிய மரியாதை, நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்கிறேன்; தென்மாநிலங்களின் சார்பாக பேசுகிறேன். இந்தியாவின் வளர்ச்சி எனும் ரயில், தென்மாநிலங்கள் வழியாகவே சென்றது, செல்கிறது, சென்று கொண்டிருக்கிறது.
தெற்கின் ஐந்து மாநிலங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் பங்களிப்பு கொடுக்கின்றன. இந்திய பொருளாதார இயந்திரத்தில், கர்நாடகா வலிமையான உந்து சக்தியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகாவின் பங்களிப்பு 9 சதவீதம். விண்வெளி துறையில் 60 சதவீதம் பங்களிப்பு எங்களுடையது.
காபி, வெள்ளரிக்காய் ஏற்றுமதியில் எங்கள் பங்களிப்பு உள்ளது. முதல் ஐந்து செயற்கை நுண்ணறிவு நகரங்களில் பெங்களூரும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 15வது நிதி ஆணையம் இருந்தபோது, பகிர்ந்தளிக்க கூடிய வரி வருவாயில் கர்நாடகாவின் பங்கு 4.7 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக குறைந்தது.
இதனால், ஆறு ஆண்டுகளில் எங்களுக்கு 65,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. கர்நாடகாவுக்கு நிதி ஆணையம் பரிந்துரை செய்த 11,495 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. நாங்கள் எங்களின் நியாயமான பங்கை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
